பாதம் கைகளோடு இழந்தனன்- கால்களையும் கைகளையும் இழந்தவனாகிய கும்பகருணன்; வெங்கனல் பொங்கி- கொடுஞ் சீற்றம் மிக்கு; படியிடை இருந்து - நிலத்திடத்திருந்து; தன் பகுவாயால் - தன் பிளந்த பெரிய வாயினால்; காதம் நீளிய மலைகளை- காதத்தளவு நீண்டு கிடக்கும் மலைகளை; கடித்து இறுத்து எடுத்து- கடித்து ஒடித்து எடுத்து; மீது மீது தன் அகத்து எழு காற்றினால் - மேலும் மேலும் தன் உள்ளிருந்து எழும் பெருமூச்சாகிய காற்றினால்; விசை கொடு திசை செல்ல - விரைவு கொண்டு திசைகளில் செல்லுமாறு; ஊத ஊதப்பட்டு- ஊதுந்தொறும் ஊதுந்தொறும் அக்காற்றினால்; வானரம் உருமின் வீழ் உயிர் என்ன உலந்தன - குரங்குப்படை இடியினால் உயிரொழியும் உயிரினம் போல உயிரொழிந்தன. |
(349) |
| 7621. | தீயினால் செய்த கண்ணுடையான், நெடும் |
| சிகையினால் திசை தீய |
| வேயினால் திணி வெற்பு ஒன்று நாவினால் |
| விசும்புற வளைத்து ஏந்தி, |
| பேயின் ஆர்ப்புடைப் பெருங் களம் எரிந்து எழ, |
| பிலம் திறந்தது போலும் |
| வாயினால் செல, வீசினன்; வள்ளலும் |
| மலர்க் கரம் விதிர்ப்புற்றான். |
| |
தீயினால் செய்த கண்ணுடையான் - தீயினால் செய்யப்பட்டாற் போன்ற சினத்தால் சிவந்த கண்களை உடையவனான கும்பகருணன்; நெடுஞ் சிகையினால் திசை தீய- தன்னிடம் இருந்து எவும் நெடிய நெருப்பு அனலால் திசைகள் எல்லாம் கருக; வேயினால் திணி வெற்பு ஒன்று- மூங்கில்களால் நெருங்கிய மலை ஒன்றினை; நாவினால் விசும்புற வளைத்து ஏந்தி- நாவினால் வானத்தைப் பொருந்த வளைத்து எடுத்து; பேயின் ஆர்ப்புடை பெருங்களம் எரிந்து எழ - பேய்களின் பேரொலி கொண்ட பெரிய போர்க்களம் எரிந்து விழுமாறு; பிலம் திறந்தது போலும் வாயினால்- குகை திறந்தது போல் உள்ள வாயினால்; செல வீசினான்- பெருந்தொலைவு வீசி எறிந்தான்; வள்ளலும் மலர்க்கரம் விதிர்ப்புற்றான் - அதுகண்ட வள்ளலாம் இராமனும் தாமரை மலர் போன்ற கை வியப்பால் அசையப் பெற்றான். |
(350) |