பக்கம் எண் :

32யுத்த காண்டம் 

கொன்று தின்றல்லது, ஓர் எண்ணம் கூடுமோ?'
என்றனன்-இகல் குறித்து எரியும் கண்ணினான்.
 

இகல் குறித்து எரியும் கண்ணினான்- பகைவரை நினைத்து,
கோபத்தால்  நெருப்பென   ஒளிரும்  கண்ணினனான மாபக்கன்;
நின்று நின்று இவை சில நேர்கிலன்- ஒருவர் பின்  ஒருவராக
நின்று இத்தகைய பேச்சுக்களைப் பேச நான் உடன்படேன்; இனி
நரரொடு குரங்கை-  இனி மனிதர்களுடன் அக்குரங்கை;  நாம்
அறக்கொன்று- நாம்  சென்று அடியோடு கொன்றழித்து; நன்று
தின்று அல்லது -  நன்றாக தின்று அல்லது;  ஓர்  எண்ணம்
கூடுமோ என்றனன்-  இதற்கு மாறுபட்ட   ஒரு    எண்ணம்
தகுமோ? தகாது என்றான்.
 

குறித்தல் - நினைத்தல், 'நாம்' என்பது நாமம்  என்பதன்
விகாரம்  என்று  கொண்டு,  'நாமற'  என்பதற்கு .குரங்குகள்
என்ற பெயரே இல்லாமல் அழித்து என்றும் பொருள் கூறுவர்.
 

(41)
 

பிசாசன் முதலியோர் கூற்று
 

6112.

'திசாதிசை போதும் நாம், அரசன் செய் வினை
உசாவினன், உட்கினன்; ஒழிதும் வாழ்வு' என்றான்-
பிசாசன் என்று ஒரு பெயர் பெற்ற பெய் கழல் 
நிசாசரன், உருப் புணர் நெருப்பின் நீர்மையான்.
 

பிசாசன் என்று  ஒரு பெயர் பெற்ற -  பிசாசன் என்னும்
பெயர் உடைய;   பெய்கழல் நிசாசரன்-  வீரக்கழல் அணிந்த
அரக்கன்; உருப்புணர் நெருப்பின் நீர்மையான் - வடிவத்தில்
அசுரன்  எனினும் நெருப்பைப்  போன்ற  தன்மை உடையவன்; 
அரசன் செய்வினை உசாவினன் - அரசன்  என்ன  செய்யப்
போகிறான்   என்பதைக்  கேட்டான்;   உட்கினன்  -   ஒரு
குரங்கால்  இலங்கை  அழிந்ததை  எண்ணி  நாணினான்; நாம்
திசை திசை  போதும் 
-   நாம்   எங்காவது   வேறு வேறு
திசைகளுக்குச் செல்வோம்;  ஒழிதும் வாழ்வு   என்றான் -
சென்று நமது வாழ்வைப் போக்கிக் கொள்வோம் என்றான்.
 

பிசாசன்-நெருப்பின்  நீர்மையான் - அரசன்  செய்வினை
உசாவினான். உட்கினன்  திசா திசை போதும் வாழ்வு ஒழிதும்
என்றான் என   இயையும்.   இரவில்   இயங்குவோர்  என்ற
கருத்தில் அரக்கரை நிசாசரர் என்பர்.
 

(42)