பக்கம் எண் :

1002யுத்த காண்டம் 

641.'இத் திறம் புரி நளற்கு இன்பம் எய்தவே
வித்தக இயற்றிட வேண்டும்' என்றனன்;
உத்தமன் உரைப்படி உஞற்றற்கு எய்தினார்
முத் திறத்து உலகையும் ஏந்தும் மொய்ம்பினார்.(13-17)
 
642.இங்கு இவை தாதையை எண்ணும் முன்னமே
அங்கு அவன் வணங்கினன், அருகின் எய்தினான்;
'புங்கவ நின் மகற்கு இனிய பொன் முடி
துங்க மா மணிக் கலன் தருதி, தூய்மையாய்!'(13-19)
 
643.என்றலும், மணி முடி, கலன்கள், இன் நறாத்
துன்று மா மலர்த் தொடை, தூய பொன்-துகில்,
குன்று எனக் குவித்தனன்; கோல மா மலர்
மன்றல் செய் விதானமும் மருங்கு அமைத்து அரோ.(13-19)
 
644.முடி புனை மண்டபம் ஒன்று முற்றுவித்து,
இடி நிகர் பல் இயம் இயம்ப, வானரர்
நெடிய வான் கங்கையே முதல நீத்த நீர்
கடிது கொண்டு அணைந்தனர் கணத்தின் என்பவே.(13-20)
 
645.நளன்தனை விதிமுறை நானம் ஆடுவித்து,
இளங் கதிர் அனைய பொன்-துகிலும் ஈந்து, ஒளிர்
களங்கனி அனையவன் ஏவ, கண் அகல்
வளம் திகழ் மண்டப மருங்கின் எய்தினான்.(13-21)
 
646.ஆனதோர் காலையின் அருக்கன் மைந்தனும்
ஏனைய வீரரும் இலங்கை மன்னனும்
வானரர் அனைவரும் மருங்கு சூழ்வர,
தேன் நிமிர் அலங்கலும் கலனும் சேர்த்தியே,(13-22)
 
647.பொலங்கிரி அனைய தோள்-தம்பி போந்து, ஒளி
இலங்கிய மணி முடி இரு கை ஏந்தினான்,
அலங்கல் அம் தோள் நளற்கு அன்பின்
சூட்டினான்--
'குலங்களோடு இனிது வாழ்க!' என்று கூறியே.(13-23)