பக்கம் எண் :

 இராவணன் மந்திரப் படலம் 33

6113.

'ஆரியன் தன்மை ஈதுஆயின், ஆய்வுறு
காரியம் ஈதுஎனின், கண்ட ஆற்றினால்,
சீரியர் மனிதரே; சிறியம் யாம்' எனா,
சூரியன்பகைஞன் என்று ஒருவன், சொல்லினான்.
 

சூரியன்  பகைஞன்   என்று   ஒருவன் -  சூரிய  சத்துரு
என்ற பெயர் கொண்ட  அரக்கவீரன்; ஆரியன்   தன்மை  ஈது
ஆயின்
- மேலோனாகிய  நம் மன்னன்   தன்மை  இதுவென்றால்;
ஆய்வுறு  காரியம்   ஈது   எனின் -   நாம்  எல்லாம்   கூடி
ஆராய்ச்சி செய்யும் காரியம்  இது  என்றால்; கண்ட ஆற்றினால்
-  இது  கொண்டு  ஆயும்  நெறியினால்;  சீரியர்   மனிதரே -
சிறந்தவர்கள் மனிதரே ஆவர்; யாம் சிறியம்-  அரக்கராகிய நாம்
சிறியவர்களே  யாம்;  எனச்  சொல்லினான் -  என்று வருந்திக்
கூறலானான்.
 

ஆரியன்-மேலோன்; இங்கு இராவணனை உணர்த்தும். அற்ப
மனிதர்களையும், குரங்கையும் அழிப்பதற்காக ஆராய்வது செயல்
எனின், மனிதரே   உயர்ந்தவராய்   விடுவர்;   அரக்கர் சிறியர்
என்றாகிவிடுமே என்பது சூரியன் பகைஞனின் வருத்தம்.
 

(43)
 

6114.

'ஆள்வினை நிலைமையும், அரக்கர் ஆற்றலும்,
தாழ் வினை இதனின்மேல் பகரத் தக்கதோ?
சூழ் வினை மனிதரால் தோன்றிற்றாம்!' எனா,
வேள்வியின் பகைஞனும் உரைத்து, வெள்கினான்.
 

வேள்வியின் பகைஞனும் - வேள்வியின் பகைஞன் என்ற
பெயருடைய   ஒரு   அரக்கனும்;     சூழ்வினை -    இந்த
மந்திராலோசனைக்  கூட்டம்;   மனிதரால் தோன்றிற்றாம் -
மானிடர்   காரணமாக   நிகழ்ந்தது   என்றால்;   ஆள்வினை
நிலைமையும்- அரக்கர்களாகிய நமது ஆட்சியின் மேன்மையும்;
அரக்கர்  ஆற்றலும் -   அரக்கர்களாகிய   நம் வலிமையும்;
தாழ்வினை இதனின் மேல்- தாழ்ந்த செயல்  இதை விடவும்;
பகரத்தக்கதோ -  வேறு  சொல்லத்  தகுந்ததுண்டோ;  என
உரைத்து வெள்கினான்
- என்று கூறி வெட்கமுற்றான்;
 

வேள்வியின்   பகைஞன் -'யக்ஞவிரோதி'   என்பதன்
தமிழாக்கம். இதற்கு மந்திராலோசனை செய்தல் வேண்டாத
ஒன்று என்பது வேள்விப் பகைஞன் கருத்தாகும்.
 

(44)