பக்கம் எண் :

42யுத்த காண்டம் 

இந்திரசித்து இராவணனைத் தடுத்து 
நானே சென்று வென்று வருவேன் எனல்
 

6128.

என்று அவன் இயம்பியிடும் எல்லையினில், 'வல்லே 

சென்று படையோடு, சிறு மானுடர் சினப் போர் 

வென்று பெயர்வாய், அரச ! நீ கொல் ? என வீரம் 

நன்று பெரிது!' என்று மகன் நக்கு, இவை 

நவின்றான்:

 

என்று  அவன்  இயம்பியிடும்  எல்லையினில் -  என்று
இராவணன்  கூறிய சமயத்திலே;மகன் நக்கு - அவன் மகனாகிய
இந்திர  சித்து கோபமாகச் சிரித்து;அரச - அரச குல வேந்தனே!
வல்லே படையோடு சென்று - விரைவாக படையுடனே சென்று;
சிறு  மானுடர்
-  அந்த  அற்ப  மனிதர்களுடன்;  சினப்போர்
வென்று
-  சினம் கொண்டு போரிட்டு வென்று;  பெயர்வாய் நீ
கொல்
-  திரும்பிப் பெயர்ந்து  வருபவன்  நீயோ?; என் வீரம்
நன்று  பெரிது
- எனது வீரம் பெரிதும் நல்லது; என்று இவை
நவின்றான்
- என்று பின்வருமாறு கூறினான்.
 

நன்று பெரிது-குறிப்பு மொழி; இங்கு இகழ்ச்சிப் பொருள் தந்து
நின்றது.
  

(58)
 

6129.

'ஈசன் அருள் செய்தனவும், ஏடு அவிழ் மலர்ப் பேர் 

ஆசனம் உவந்தவன் அளித்தனவும், ஆய 

பாசம் முதல் வெம் படை சுமந்து, பலர் நின்றார்; 

ஏச உழல்வேன் ஒருவன் யானும் உளென் அன்றோ? 

 

ஈசன் அருள் செய்தனவும்- சிவபெருமான் அருளால் நமக்குத்
தந்த ஆயுதங்களும்; ஏடு அவிழ் - இதழ்கள் மலர்ந்து விரிந்துள்ள;
மணிப்பேராசனம் - தாமரை மலராகிய ஆசனத்தில்;உவந்தவன் -
விரும்பி வீற்றிருப்பவனாகிய  பிரமதேவன்;  அளித்தனவும் ஆய -
நமக்குக் கொடுத்த ஆயுதங்களும் ஆகிய; பாசம் முதல் வெம்படை
- பாசம் முதலிய  கொடிய ஆயுதங்களை; சுமந்து பலர் நின்றார் -
கைகளில்  சுமந்து கொண்டு  வீரர்கள் பலர் இங்கு நிற்கிறார்கள்; ஏச
உழல்வேன் ஒருவன்
-  உலகத்தவர் பழித்துப்   பேச   அதனால்
வருந்தித்திரியும்  ஒருவனாக;  யானும் உளன் அன்றோ -  நானும் 
இங்கு இருக்கிறேன் அல்லவா?