பக்கம் எண் :

48யுத்த காண்டம் 

6140.

'மூவரை வென்று, மூன்று உலகும் முற்றுறக் 

காவலில்நின்று, தம் களிப்புக் கைம்மிக, 

வீவது முடிவு என வீந்தது அல்லது, 

தேவரை வென்றவர் யாவர், தீமையோர்?

 

மூவரை வென்று - மும்மூர்த்திகளையும் வென்று; மூன்று உலகம்
முற்றுற
- மூன்று  உலகங்கள்  முழுதும்; காவலில்  நின்று - ஆட்சி
புரிதலை  மேற்கொண்டும்;தம்  களிப்பு  கைம்மிக - தம் செருக்கு
எல்லை  கடந்து  மிகுவதால்;வீவது முடிவு என - இவர்கள் அழிவது
உறுதி  என்று கூறும்படி; வீந்த தல்லது - அழிந்த தல்லது; தேவரை
வென்றவர்  தீமையோர்  யாவர் 
- தேவர்களை வென்று வாழ்ந்த
கொடியவர்கள் யாருளர்?
 

காவலில் நின்று-ஆட்சி புரிந்து வரும் காரியத்தை மேற்கொண்டு.
களிப்பு-செருக்கு. கைம்மிக-எல்லை கடந்து செல்ல.
 

(70)
 

6141.

'வினைகளை வென்று, மேல் வீடு கண்டவர் 

எனைவர் என்று இயம்புகேன், எவ்வம் தீர்க்கையான்? 

முனைவரும் அமரரும், முன்னும் பின்னரும், 

அனையவர் திறத்து உளர் யாவர், ஆற்றினார்? 

 

முனைவரும் அமரரும் - முனிவர்களும் தேவர்களும்; முன்னும்
பின்னரும்
-  முற்காலத்தும்  பிற்காலத்தும்;எவ்வம் தீர்க்கையான்
- குற்றமான செயல்களை விட்டு விட்டமையால்; வினைகளை வென்று
- இருவினைகளையும் வென்று;மேல்  வீடு  கண்டவர்  -  மேலான
பரமபதத்தை  அடைந்தவர்கள்;  எனைவர்  என்று  இயம்புகேன் -
எத்தனை பேர் என்று  சொல்லுவேன்;  அனையவர்  திறத்து - அந்த
அசுரர்  முதலானவர்களுள்;  யாவர் ஆற்றினார் உளர் - வீட்டின்பம்
பெற்றவர் யாருளர்?
 

முனைவர் - முனிவர்கள்.  எனைவர் - எவ்வளவினர்.   நல்வினை
தீவினை   இரண்டினுள்    நல்வினையும்   பிறப்புக்குக்காரணமாதலால்
'வினைகளை'  வென்று  என்றார்.  மேல்வீடு  -  உயர்ந்த வீட்டின்பம்.
எவ்வம்-குற்றம்.
 

(71)
 

6142.

'பிள்ளைமை விளம்பினை, பேதை நீ' என

ஒள்ளிய புதல்வனை உரப்பி, 'என் உரை

எள்ளலையாம்எனின், இயம்பல்ஆற்றுவென்,

தெள்ளிய பொருள்' என அரசற் செப்பினான்: