பக்கம் எண் :

100யுத்த காண்டம் 

மனக்குவந்தனன்   -   எனது   மனத்தில் கோயில் கொண்டான்;
யாவையும் வந்தன- அதனால் எல்லாவகை ஞானங்களும் எளிதில்
வந்தெய்தின;  உனக்கும்  இன்னதின் நல்லது ஒன்று இல் என
உரைத்தான்
- உனக்கும்   இதை விடவேறு நல்லது எதுவுமில்லை
என்று கூறினான்.
 

ஒருதனித்தலைவன்  என்பது "உன்னை நீ தானும் உணராதாய்"
என்ற வில்லிபாரதப் பாடலையும்  (வில்லி.  கிருட்டிணன்  தூது.36);
தனக்கும் தன் தன்மை  அறிவரியான்  என்பதையும்  (நம்மாழ்வார்
2892) நினைவுறுத்தும். மனக்கு - மனத்துக்கு என்பதன் தொகுத்தல்
விகாரம். இன்னதின் - இதைவிடவும் ஒரு தனி - மீமிசைச் சொல்.
 

(33)
 

மறையவன் நிகழ்ந்ததை இரணியனுக்கு அறிவித்தல்
 

6222.

'மாற்றம் யாது ஒன்றும் உரைத்திலன், மறையவன்;

மறுகி,

"ஏற்றம் என்? எனக்கு இறுதி வந்து எய்தியது"

என்னா,

ஊற்றம் இல்லவன் ஓடினன் கனகனை உற்றான்,

தோற்ற வந்தது ஓர் கனவு கண்டனன் எனச்

சொன்னான்:

 

மறையவன் - ஆசிரியனாகிய அந்த வேதியன்;மாற்றம் யாது
ஒன்றும் உரைத்திலன்
- பிரகலாதன் கூறியன கேட்டு எந்த ஒரு
மறு  மொழியும்  கூறவில்லை;   மறுகி - மனம் கலங்கி;  ஏற்றம்
ஏன்?
-  இனி எனக்கு என்ன ஏற்றம் வரப் போகிறது?; எனக்கு
இறுதி  வந்து  எய்தியது 
-   எனக்கு   அழிவு காலம் வந்து
சேர்ந்தது; என்னா- என்று எண்ணியவனாக; ஊற்றம் இல்லவன்
- மனத்துணிவு இல்லாத அவன்; ஓடினன் கனகனை உற்றான்-
ஓடோடியும் சென்று இரணியனை அடைந்தான்;  தோற்ற வந்த
தோர்
- பின்னால் நேர இருப்பதை உணர்த்த வந்த ஒரு; கனவு
கண்டனன் எனச் சொன்னான்
- கனவு கண்டவனைப் போல
இரணியனிடம் சொல்லலானான்.
 

ஏற்றம் - ஆக்கம். ஊற்றம் - மனஉறுதி. கனகன் - இரணியன்.
தோற்ற வந்த தோர்  கனவு;  பின்னால் நேர  இருக்கும் தீங்கைத்
தெரிவிக்க வந்த ஒரு கனவு.
 

(34)