எந்தை பெருமானே - எமக்கெல்லாம் தந்தையான எம்பெருமானே; பொன்னுளே தோன்றியதோர் பொற்கலனே போல்கின்றேன் - உன்னிலிருந்து தோன்றி நான்; பொன்னிலிருந்து தோன்றிய பொற்கலன் போன்றவனாவேன். |
இறைவனுக்கும் உயிர்களுக்கும் இடையே அமைந்த தொடர்பு பொன்னுக்கும், அதனால் செய்யப்பட்டு அப்பொன்னினும் வேறாகாத அணி கலனுக்கும் இடையுள்ள சம்பந்தம் போன்றது. இதனை "அபேத சம்பந்தம்" எனச் சமய நூல்கள் கூறும் இப்பாடலின் கடைசி இரண்டடிகள் இந்த உண்மையைக் கூறுவதாம். பின் - காரியம் முன் - காரணம். |
உன்னையல்லாது எனக்கு ஆதியும் வேறில்லை. நான் சென்றடையும் அந்தமும் வேறில்லை என்பார் 'முன் இலேன் பின்இலேன்' என்றார் என்று கூறினும் அமையும், |
(160) |
சிங்கப்பிரான் சீற்றம் தணிந்து தேவர்களுக்கு அபயம் அளித்தல் |
6349. | 'என்று ஆங்கு இயம்பி, இமையாத எண்கணனும், |
| வன் தாள் மழுவோனும், யாரும், வணங்கினரால் |
| நின்றார், இரு மருங்கும்; நேமிப் பெருமானும், |
| ஒன்றாத சீற்றத்தை உள்ளே ஒடுக்கினான். |
|
என்று ஆங்கு இயம்பி - என்றெல்லாம் பலவாறு கூறித் துதித்து; இமையாத எண்கணனும் - இமைக்காத எட்டுக்கண்களை உடையவனான பிரமதேவனும்; வன்தாள் மழுவோனும் - வலிய போர்த் தொழில் வல்ல மழுவை ஆயுதமாக உடைய சிவபிரானும்; யாரும் வணங்கினர்- மற்றுமுள்ள தேவர்கள் எல்லோரும் நரசிங்க மூர்த்தியை வணங்கினார்கள்; இரு மருங்கும் நின்றார்- அப்பெருமானுக்கு இருபுறங்களிலும் வந்து குழுமி நின்றார்கள்; நேமிப் பெருமானும் - சக்கராயுதத்தை உடைய எம்பெருமானும்; ஒன்றாத சீற்றத்தை- தன் இயல்புக்கு ஒவ்வாத பெருஞ்சினத்தை; உள்ளே ஒடுக்கினான்- தனக்குள்ளே ஒடுங்குமாறு செய்தருளினான். |
தேவர்கள் இமையாநாட்டம் உடையவராதலின் 'இமையாத எண்கணன்' என்றார். எண்கண்ணன் - பிரமன். கருணையே இறைவனது இயல்பு. அப்பெருமானது இயல்புக்குச் சிறிதும் ஒவ்வாதது சினமாதலின் 'ஒன்றாத சீற்றம்' என்றார். |
(161) |