பக்கம் எண் :

200யுத்த காண்டம் 

நல்வினை உடைய  நான்கு  பேரும்; விரைவில் வந்தனர்-
விரைந்து வீடணனிடம் வந்தனர்; கனை  கழல்   காலினர்-
வீரக் கழல் அணிந்த  கால்களை  உடையவர்களும்;  கருமச்
சூழ்ச்சியர்
- ஆராய்ந்து செயல்படும் தகுதி உடையவர்களும்;
இனைவரும்- ஆகிய இத்தகைய அவர்கள்;  வீடணனோடும்
ஏயினர்
- வீடணனுடன் சேர்ந்து கொண்டனர்.
 

ஆராய்ந்து செயல்படத்தக்க நற்  பண்பு  கொண்டவர்கள்
என்பதால் 'கருமச் சூழ்ச்சியர்' என்றார்.
 

அனலன், அனிலன்,  அரன்,  சம்பாதி  ஆகிய  நால்வரும்
வீடணனுடைய  அமைச்சர்கள்.  வீடணன்  இலங்கை  விட்டுப்
போன போதும் அவனை விட்டுப் பிரியாதவர்களாக, அவனுடன்
சேர்ந்து  கொண்டனர்  என்பதனை  'வீடணனோடும்  ஏயினார்'
என்றார்.
 

(13)
 

6378.

அரக்கனும், ஆங்கண் ஓர் அமைச்சர் நால்வரும்,

'குரக்கு இனத்தவரொடும் மனிதர், கொள்ளை நீர்க்

கரைக்கண் வந்து இறுத்தனர்' என்ற காலையில்,

'பொருக்கென எழுதும்' என்று எண்ணிப் போயினார்.

 

அரக்கனும்- அரக்கரினத்தில்  பிறந்தவனான  வீடணனும்;
ஆங்கண்   ஓர்   அமைச்சர்   நால்வரும்-  அவனுடைய
அமைச்சர்கள்       நால்வரும்      அப்போது;     'குரக்கு
இனத்தவரொடும்
-   வானரப்     படையுடனே;   மனிதர் -
மனிதர்களான இராமனும், இலக்குவனும்;  வந்து   இறுத்தனர்
- வந்து தங்கியிருக்கிறார்கள்;  என்ற  காலையில் -  என்னும்
பொழுது; பொருக்கென எழுதும் - விரைந்து  அங்கு எழுந்து
போவோம்;   என்று  எண்ணிப்   போயினார்  -   என்று
எண்ணியவர்களாகச் சென்றனர்.
 

ஆங்கண்  -  அப்போது.  'கொள்ளை   நீர்'  -   கடல்.
'உத்தமன்' என  முன்பு கூறியவர்  நல்ல  பண்புள்ளவனாயினும்
அரக்கர் இனத்தில் பிறந்தவன் என்பதைக் குறிப்பிட வீடணனை
'அரக்கன்' என்றார்.
 

(14)
 

வீடணன் வானரத்தானையைக் கண்டு வியத்தல்
 

6379.

அளக்கரைக் கடந்து, மேல் அறிந்து, நம்பியும்,

விளக்கு ஒளி பரத்தலின், பாலின் வெண் கடல்

வளத் தடந் தாமரை மலர்ந்ததாம் என,

களப் பெருந் தானையைக் கண்ணின் நோக்கினான்.