பக்கம் எண் :

 வீடணன் அடைக்கலப் படலம் 201

அளக்கரைக்  கடந்து -   அந்தக்   கடலைக்  கடந்து
வடகரையை அடைந்து; மேல் அறிந்து - மேலே நடந்ததனை
அறிந்து (முன்பு நடந்தது); நம்பியும்- இளவலாகிய வீடணனும்;
விளக்கொளிபரத்தலின்- கடற்கரை முழுதும் விளக்குகளின்
ஒளிபரந்திருப்பதால்; பாலின்  வெண்  கடல்-   வெண்மை
நிறமான பாற்கடல் மீது; வளத்தடந்தாமரை- அழகிய அகன்ற
செந்தாமரை  மலர்கள்;  மலர்ந்தாம்  என -  மலர்ந்துள்ளது
போல    (காட்சிதந்த);      களப்பெரும்    தானையை -
போர்க்களத்துக்குச்  செல்லும்   அந்தப்   பெரிய   வானரப்
படையை; கண்ணின் நோக்கினான் - கண்களால் பார்த்தான்.
 

அளக்கர் - கடல். வளம் - அழகு. கடலைக் கடந்து, வட
கரையை  அடைந்த  வீடணன்  முன்பு  நடந்ததை  அறிந்து.
பாற்கடலிலே  தாமரை மலர்ந்தது  போல,  வெண்மை  நிறம்
உடைய   வானரப்   படை    தங்கியுள்ள   அவ்விடத்திலே
விளக்கொளிபரவியிருத்தலைத்  தனது கண்களால்  பார்த்தான்
என்பது கருத்து.
 

(15)
 

6380.

'ஊனுடை உடம்பின உயிர்கள் யாவையும்

ஏனைய ஒரு தலை நிறுத்தி எண்ணினால்,

வானரம் பெரிது' என, மறு இல் சிந்தையான்,

தூ நிறச் சுடு படைத் துணைவர்ச் சொல்லினான்:

 

ஊன் உடை உடம்பின-   (இவ்வுலகெங்கும்  வாழும்)
ஊன்  மிக உடைய    உடம்பினை    உடைய;  உயிர்கள்
யாவையும்
-  உயிரினங்கள்   எல்லாவற்றையும்;  ஏனைய
ஒருதலை நிறுத்தி
-  மற்றொரு  பக்கம்  நிற்கச்   செய்து;
எண்ணினால் -  எண்ணுவோமானால்;  வானரம்  பெரிது
என
- வானரப் படையே அளவில் பெரியதாயிருக்கும் என்று;
மறு இல் சிந்தை  யான்-  குற்றமற்ற மனமுடையவனாகிய
வீடணன்; தூநிறச் சுடு படை- புலால்மணம்  வீசு  கொடிய
படைக்கலங்களை     உடையவர்களான;      துணைவர்ச்
சொல்லினான்
- தனது அமைச்சர்களுக்குக் கூறினான்.
 

தூ - தசை (புலால்) நிறம் - (இங்கு) மணம்.
  

(16)
 

6381.

'அறம்தலை நின்றவர்க்கு அன்பு பூண்டனென்;

மறந்தும் நன் புகழ் அலால் வாழ்வு வேண்டலென்;

"பிறந்த என் உறுதி நீ பிடிக்கலாய்" எனாத்

துறந்தனென்; இனிச் செயல் சொல்லுவீர்' என்றான்.