பக்கம் எண் :

 வீடணன் அடைக்கலப் படலம் 203

இனிக்கடன் மாட்சியின் அமைந்தது  வேறு  மற்று  இலை"
என்றனர்.  கல்வி   மிக்கவர்கள்,  ஆலோசனைத்   திறம்
உடையவர்கள்  என்பதால்  அமைச்சர்களை "கல்வி  சால்
சூழ்ச்சியின்  கிழவர்"   என்றார்.    கிழவர்  -   உரிமை
உடையவர்கள்.
 

(18)
 

6383.

'நல்லது சொல்லினீர்; நாமும், வேறு இனி

அல்லது செய்துமேல், அரக்கர் ஆதுமால்;

எல்லை இல் பெருங் குணத்து இராமன் தாள் இணை

புல்லுதும்; புல்லி, இப் பிறவி போக்குதும்.

 

நல்லது  சொல்லினீர் -  (அமைச்சர்கள்  கூறியதைக்
கேட்ட வீடணன்) நமக்கு  நன்மையாவதொன்றையே நீங்கள்
கூறினீர்கள்; நாமும்  வேறினி  அல்லது  செய்துமேல்-
நாமும்  இராமபிரானைச்   சென்று   சேர்வதல்லாத  வேறு
செய்வோமாயின்; அரக்கர் ஆதுமால்-அரக்கத்தன்மையினர்
ஆவோம்; எல்லையில் பெருங் குணத்து-எல்லையில்லாத
நல்ல குணங்களை  உடையவனான; இராமன்  தாளிணை
புல்லுதும்
-  இராமபிரானுடைய   திருவடி   இணைகளைச்
சேருவோம்; புல்லி  இப்பிறவி  போக்குதும்-  சேர்ந்து
இந்தப் பிறவி நோயைப் போக்கிக் கொள்வோம்.
 

இராமபிரானைச்  சென்று  சேர்வதை   விட்டு  வேறு
ஏதேனும் நாம் செய்வோமாயின்  நாமும்  அடாத  செயல்
செய்யும்   அரக்கர்கள்   ஆய்விட  நேரிடும்   என்றான்.
குணங்களால் உயர்ந்தவள்ளலான இராமனை "எல்லை இல்
பெருங்குணத்திராமன்"    என்றது,    பிறப்பால்    வந்த
புன்மையைச்  சார்பின்  சிறப்பால்   போக்குதற்கு   வழி
கண்டனன் ஆதலின்; 'இராமன் தாள் இணையைச் சார்ந்து
இந்த அரக்கப் பிறவியை நீக்கிக் கொள்வோம்' என்றான்:
இனத்தான் ஆம் இன்னான் எனப் படுஞ்  சொல்  (குறள்
453) என்றதை நினைக.
 

(19)
 

6384.

'முன்புறக் கண்டிலென்; கேள்வி முன்பு இலென்;

அன்பு உறக் காரணம் அறியகிற்றிலேன்;

என்பு உறக் குளிரும்; நெஞ்சு உருகுமேல், அவன்

புன் புறப் பிறவியின் பகைஞன் போலுமால்.

 

முன்புறக் கண்டிலேன்- அந்த இராமபிரானை இதற்கு
முன்பு நான் நேரில் பார்த்ததில்லை; கேள்வி முன்பிலேன்-
அவனைப் பற்றி முன்பு கேள்விப்பட்டதுமில்லை;அன்புஉறக்
காரணம் அறிய கிற்றிலேன்- அப்பெருமான்  மீது அன்பு
கொள்ளத் தக்க காரணம்