பக்கம் எண் :

 வீடணன் அடைக்கலப் படலம் 205

6386.

'ஆயது பயப்பது ஓர் அமைதி ஆயது;

தூயது, நினைந்தது; தொல்லை யாவர்க்கும்

நாயகன் மலர்க்கழல் நணுகி, நம் மனத்து

ஏயது முடித்தும்' என்று இனிது மேயினான்.

 

ஆயது  பயப்பது - அந்த   பிரமன்  தந்தவரம்  நன்மை
தருதற்குரிய; ஓர் அமைதி ஆயது- ஒரு  நல்லகாலம் ஆயிற்று;
நினைந்தது தூயது- நீங்கள் நினைந்து கூறியதே தூய்மையானது;
தொல்லை யாவர்க்கும் நாயகன்-பழமையான, எல்லோருக்கும்
தலைவனான இராமபிரானது; மலர்க்கழல் நணுகி-மலர் போன்ற
பாதங்களை அடைந்து; நம் மனத்து ஏயது  முடித்தும்- நமது
மனத்துக்குப் பொருந்தியதனைச்  செய்து  முடிப்போம்;  என்று
இனிது மேயினான்
- என்று கூறி இனிதே இருந்தான்.
 

ஆயது - அந்தப் பிரமன் தந்த  வரம். ஓர் அமைதி - ஒரு
தகுந்த சமயம். தொல்லை நாயகன்  யாவர்க்கும் நாயகன் எனக்
கூட்டி உணர்க. தொல்லை - பழமை. ஏயது - பொருந்தியது.
 

(22)
 

6387.

'இருளிடை எய்துவது இயல்பு அன்றாம்' என,

பொருள் உற உணர்ந்த அப் புலன் கொள்

கேள்வியார்,

மருளுறு சோலையின் மறைந்து வைகினார்;

உருளுறு தேரவன் உதயம் எய்தினான்.

 

இருளிடை  எய்துவது-  இருள்  நிறைந்த  இந்த  இரவு
நேரத்திலே அங்கு சென்று  அடைவது; இயல்பு  அன்றாம்
என
- (புதியவர்களாகிய நமக்கு) இயல்பாகாது என்று; பொருள்
உற
உணர்ந்த- பொருள்  பொருந்திய  தன்மையை  அறிந்து
உணர்ந்தவர்களான;   அப்புலன்   கொள்   கேள்வியார்-
அறிவமைந்த கேள்வி ஞானம் உடைய வீடணன்  முதலியோர்;
மருள்உறு சோலையின் - இருள் நிறைந்த ஒரு சோலையிலே;
மறைந்து   வைகினார்-   பிறர்    எவரும்    அறியாதபடி
இரவுமுழுதும்  மறைந்து  தங்கியிருந்தார்கள்;   உருள்  உறு
தேரவன்
- ஒற்றையாழித்  தேரை  உடையவனாகிய  சூரியன்;
உதயம் எய்தினான்- உதயகிரியை அடைந்தான்.
 

பொருள் உற உணர்ந்த - உலகியல்பை உணர்ந்த. உருள்-
சக்கரம் உருள் உடைத் தேரவன் - ஒற்றைச்  சக்கரத் தேரை
உடைய சூரியன்.
 

(23)