இராமபிரான் கடற்கரைப் பகுதிகளைக் காணல் |
6388. | அப் புறத்து, இராமன், அவ் அலங்கு வேலையைக் |
| குப்புறக் கருதுவான், குவளை நோக்கிதன் |
| துப்பு உறச் சிவந்த வாய் நினைந்து சோர்குவான், |
| இப் புறத்து இருங் கரை மருங்கின் எய்தினான். |
|
அப்புறத்து- அடுத்த பகுதியான அந்த இடத்திலே; இராமன்- இராமபிரான்; அவ்அலங்கு வேலையை- அந்த அலை வீசுகின்ற தென் கடலை; குப்புறக் கருதுவான்- தாண்டி, மறுகரை சேர நினைப்பவன்; குவளை நோக்கிதன்- குவளை மலர் போன்ற கண்களை உடைய சீதா பிராட்டியின்; துப்பு உறச் சிவந்த வாய்- பவளம் போன்ற சிவந்த வாயை; நினைந்து சோர்குவான் - எண்ணி, மனம் சோர்ந்தவனாக; இப்புறத்து இருங்கரை- கடலில் இப்புறமான வடபுறத்தின் பெரிய கரையின்; மருங்கின் எய்தினான்- பக்கத்தில் சென்று சேர்ந்தான். |
அலங்குதல் - அலைவீசுதல். குப்புறக்கருதுதல் - தாண்டி அப்பாற் செல்ல நினைத்தல். துப்பு - பவளம். |
(24) |
6389. | கானலும் கழிகளும், மணலும், கண்டலும், |
| பானலும் குவளையும், பரந்த புன்னையும், |
| மேல் நிறை அன்னமும் பெடையும், வேட்கை கூர் |
| பூ நிறை சோலையும், புரிந்து நோக்கினான்.+ |
|
கானலும்- கடற்கரைச் சோலையும்; கழிகளும்- உப்பங்கழிகளும்; மணலும் -கடற்கரை மணலும்; கண்டலும் - தாழைப்புதர்களும்; பானலும் குவளையும்- கருநெய்தலும், குவளை மலரும்; பரந்த புன்னையும் - கடற்கரையில் பரந்துள்ள புன்னை மரங்களும்; மேல்நிறை அன்னமும் - அந்தப் புன்னை மரங்களின் மேல் நிறைந்திருக்கும் அன்னப் பறவைகளும்; பெடையும்- பெண் அன்னங்களும்; வேட்கை கூர் பூநிறை சோலையும் - காண்போர் விரும்பும் மலர் நிறைந்த சோலைகளும்; புரிந்து நோக்கினான் - ஆகியவைகளை எல்லாம் இராமபிரான் விருப்பத்துடன் பார்க்கலானான். |
கானல் - கடற்கரைச் சோலை. கண்டல் - தாழை. பானல் கரு நெய்தல். |
(25) |