பக்கம் எண் :

 வீடணன் அடைக்கலப் படலம் 207

6390.

தரளமும், பவளமும், தரங்கம் ஈட்டிய

திரள் மணிக் குப்பையும், கனக தீரமும்,

மருளும் மென் பொதும்பரும், மணலின் குன்றமும்,

புரள் நெடுந் திரைகளும், புரிந்து நோக்கினான்.*

 

தரங்கம் ஈட்டிய- கடல் அலைகள் தொகுத்துச்  சேர்த்த;
தரளமும் பவளமும்- முத்துக்களையும் பவளங்களையும்; திரள்
மணிக்குப்பையும்-    திரண்டுள்ள     பலவகை      மணிக்
குவியல்களையும்; கனக தீரமும்- பொன்துகள் நிறைந்த  கரைப்
பரப்பையும்; மருளும்  மென்  பொதும்பரும்-  பார்த்தவர்கள்
அஞ்சும்படியான    மெல்லிய    சோலைகளையும்;   மணலின்
குன்றமும்
- மணல் திடல்களையும்; புரள் நெடும் திரைகளும்-
புரண்டு    எழுகின்ற    பெரிய    அலைகளையும்;   புரிந்து
நோக்கினான்
- இராமபிரான் விரும்பிப் பார்த்தான்.
 

தரங்கம் - அலை.  தீரம் -  கரை.  பொதும்பர் -  சோலை.
கடல்  அலைகள்  கொணர்ந்து  ஒதுக்கிய  தரளம்  முதலியவை
பிராட்டி நினைவை இராமபிரானுக்கு ஊட்டின. சீதையை நினையும்
விருப்பத்தைப் புரிந்து நோக்கினான் என்றார். புரிதல்-விரும்புதல்.
 

(26)
 

6391.

மின் நகு மணி விரல் தேய, வீழ் கணீர்

துன்ன அரும் பெருஞ் சுழி அழிப்ப, சோர்வினோடு

இன் நகை நுளைச்சியர் இழைக்கும் ஆழி சால்

புன்னை அம் பொதும்பரும் புக்கு, நோக்கினான்.*

 

மின் நகுமணி விரல் தேய- மின்னலைப் பழிக்கும்படியான
அழகிய  விரல்கள்   தேயவும்;   வீழ்   கணீர்   துன்னரும்
பெருஞ்சுழி
அழிப்ப-  கண்களில்  இருந்து  சிந்தும்  கண்ணீர்
அரிய பெரிய சுழிகளை அழிக்கவும்; இன்  நகை  நுளைச்சியர்
- இனிய புன் முறுவலை உடைய வலைச்சியர்;  சோர்வினொடு
இழைக்கும்
-  மனச்  சோர்வுடன்  தரையில்  எழுதும்  கூடல்
இழைத்துப்   பார்த்ததால்  ஏற்பட்ட;   ஆழிசால்   புன்னை
அம்பொதும்பரும்
-    சுழிகள்   ஆங்காங்கு    காணப்படும்
புன்னைமரச்    சோலைகளிலும்;     புக்கு   நோக்கினான்-
இராமபிரான் சென்று பார்த்தான்.
 

வீழ்கணீர் - சிந்தும்  கண்ணீர்  பெருஞ்சுழி - கூடற்  சுழி.
தலைவனைப் பிரிந்த தலைவி அவன் வருவானோ, மாட்டானோ
என, தரையிலே சுழிகள் எழுதிப் பார்ப்பாள். தெள்ளியார் பலர்
கை    தொழும்     தேவனார்,      வள்ளல்      மாலிருஞ்
சோலைமணாளனார், பள்ளி கொள்ளு