பக்கம் எண் :

210யுத்த காண்டம் 

'ஊடலில் தோற்றவர் வென்றார்  அது  மன்னும்,  கூடலில்
காணப்படும்' என்னும் குறள் (1327) ஒப்பிடத்தக்கது.
 

(31)
 

சுக்கிரீவன் முதலியோர் சொற்களால் இராமபிரான் மெலிவு
நீங்குதல்
 

6396.

இத் திறம் எய்திய காலை, எய்துறும்

வித்தகர் சொற்களால் மெலிவு நீங்கினான்

ஒத்தனன் இராமனும், உணர்வு தோன்றிய

பித்தரின், ஒரு வகை பெயர்ந்து போயினான்.

 

இத்திறம்  எய்திய   காலை-   இராமன் இத்தன்மையை
அடைந்த  போது;  எய்துறும்  வித்தகர் -   அங்கு   வந்த
சுக்கிரீவன், அனுமன் முதலிய அறிவு  மேம்பட்ட  வித்தகர்கள்;
சொற்களால்
-  கூறிய   ஆறுதல்   மொழிகளால்;  மெலிவு
நீங்கினான்  ஒத்தனன்
  இராமனும் - இராமபிரான்  மெலிவு
நீங்கப்பெற்றவனை  ஒத்தவனாயினான்;  உணர்வு  தோன்றிய
பித்தரின்
- சிறிது நல்லுணர்வு தோன்றிய பித்தர்களைப் போல;
ஒருவகை  பெயர்ந்து  போயினான் -   அங்கிருந்து  நீங்கி
ஒருவாறு வேறிடம் சென்றான்.
 

(32)
 

வீடணன் வருகை
 

6397.

உறைவிடம் எய்தினான், ஒருங்கு கேள்வியின்

துறை அறி துணைவரோடு இருந்த சூழலில்,

முறை படு தானையின் மருங்கு முற்றினான்-

அறை கழல் வீடணன், அயிர்ப்பு இல் சிந்தையான்.

 

உறைவிடம் எய்தினான்- இராமபிரான் தான் தங்கியிருக்கும்
பாசறையை   அடைந்தான்;   ஒருங்கு   கேள்வியின்   துறை
அறிதுணைவனோடு
- ஒரு சேர, நல்ல நூல்களை  கேட்டறிந்த
துணைவர்களான  சுக்கிரீவன்    முதலியவர்களோடு;   இருந்த
சூழலில்
-  இராமபிரான்   அமர்ந்திருந்த  அந்த  இடத்துக்கு;
அயிர்ப்பு   இல்   சிந்தையான்-  எவ்வித   ஐயமுமில்லாத
மனத்தினனாகிய;  அறை கழல் வீடணன்-  ஒலிக்கின்ற  கழல்
அணிந்த கால்களை உடைய வீடணன்;  முறை  படுதானையின்
மருங்கு முற்றினான்
- முறையாக அங்கு  தங்கியிருந்த  வானரப்
பக்கத்திலே சேர்ந்தான்.