பக்கம் எண் :

 வீடணன் அடைக்கலப் படலம் 275

அதுவல்ல என்றால்; கார்முகில் கமலம்   பூத்தது  அன்று -
கருமை   நிற  மேகம் கமலம் பூத்தது போன்றவன். அதுவுமல்ல
எனின்;   இவன்  கண்ணன் கொல்லாம்- இத்தன்மை உடைய
இவன் திருமால்  தானோ;   ஆர் அருள் சுரக்கும் - நிறைந்த
அருளைப் பொழியும்;   நீதி   அற   நிறம் - நீதியை உடைய
அறக்கடவுளின் நிறம்; கரிதோ என்றான் - கருமை நிறமோ என
வியந்துரைத்தான்.
 

இராமபிரானைத்   தரிசித்த   மகிழ்ச்சியால்  வீடணன் உடல்
ரோம புளகாங்கிதம் எய்தினான் என்பதை 'அங்கம் மென்   மயிர்
சிலிர்த்து' என்றார். மகிழ்ச்சி  மிகுதியால்   ஆனந்தக்   கண்ணீர்
சொரிந்தான் என்பதனை, "கண்ணீர் வார"   என்றார். வார-பெருக.
அழகான கண்களை உடைய அஞ்சனமலையோ   என இராமனை
நோக்கி வியந்து-அல்ல என்றான், நீலமேக   மொன்று - தாமரை
பூத்ததோ, அதுவுமல்ல. இவன் திருமாலேதான்.  நிறைந்த  அருள்
பொழியும் நீதியை உடைய தரும தேவதையின் நிறம் கருமையோ?
என்று வியந்துரைத்தான். 
 

(134)
 

6499.

'மின்மினி ஒளியின் மாயும் பிறவியை வேரின் வாங்க,
செம் மணி மகுடம் நீக்கி, திருவடி புனைந்த

செல்வன்

தம்முனார், கமலத்து அண்ணல் தாதையார், சரணம் 

தாழ,

எம்முனார் எனக்குச் செய்த உதவி'என்று 

ஏம்பலுற்றான்.

 

மின்மினி ஒளியின் மாயும் - மின்மினிப் பூச்சியின் ஒளியைப்
போலத் தோன்றி மறையும்படியான; பிறவியை வேரின்  வாங்க -
பிறவி நோயை அடியோடு நான் போக்கிக் கொள்ளவே; செம்மணி
மகுடம் நீக்கி
- சிவந்த மணிகள்   பதித்த   மணி  மகுடத்தைத்
துறந்து; திருவடி புனைந்த செல்வன்   தம்முனார்  -  இவனது
திருவடிகளைச்  சிரத்தில்   சூடிக்கொண்ட  செல்வத்தை   எய்திய
பரதனுக்கு   முன்னோனான   இராமன்;   கமலத்து   அண்ணல்
தாதையார் 
-   தாமரை   மலரில்   வாழும்   பிரமதேவனுக்கும்
தந்தையான இராமபிரானுடைய;  சரணம் தாழ   -   திருவடிகளில் 
வீழ்ந்து நான் வணங்குமாறு; எம்முனார் எனக்குச் செய்த உதவி
- என் முன்னவனாகிய   இராவணன்   எனக்குச்   செய்த  உதவி
இதுவாகும்; என்று ஏம்பலுற்றான் - என்று கூறி மகிழ்ச்சியுற்றான்.