பக்கம் எண் :

276யுத்த காண்டம் 

மின்மினிப்   பூச்சியின்   ஒளி  தோன்றிய உடனே மறையும்
தன்மை உடையது. 'பிறவி' என்பதும்  இதுபோலத்தான் என்பான்.
'மின்மினி ஒளியின்  மாயும்   பிறவி'   என்றான்.   இராமபிரான்
திருமாலின் அவதாரமாதலின் அவன் சரணம் தாழ, பிறவி நோய்
அடியோடு தீரும் என்பான். 'பிறவியை வேரின் வாங்க' என்றான்.
தாதை உதவிய தரணிதன்னைத் தீவினை என்ன நீத்து  வந்தவன்
பரதன் என்பதால் 'மகுடம் நீக்கி திருவடி புனைந்த   செல்வன்"
எனப் பரதனைச் சிறப்பித்தான். 'செல்வன் கழலேத்தும் செல்வம்
செல்வமே" என்பார்   மேலோர்.   இராமபிரான் திருவடிகளைச்
சிரத்தில் சூடி, மேலான செல்வம்  எய்திய பரதனை. 'செல்வன்'
என்றது குறிப்பிடத்தக்கதாகும்.   பிறவித்   துன்பம் அடியோடு
நீங்க, இராமபிரான் திருவடிகளை   நான்   சேரச் செய்த என்
முன்னோன் எனக்குப் பேருதவி   செய்தான்   என்று   கூறி
மகிழ்ந்தவன், 'எம்முனார் எனக்குச் செய்த உதவி' என்றான். 
 

(135)
 

6500.

'பெருந் தவம் இயற்றினோர்க்கும் பேர்வு அரும் பிறவி 

நோய்க்கு

மருந்து என நின்றான் தானே வடிக் கணை 

தொடுத்துக் கொல்வான்

இருந்தனன்; நின்றது, என்னாம் இயம்புவது? எல்லை 

தீர்ந்த

அருந் தவம் உடையர் அம்மா, அரக்கர்! என்று 

அகத்துள் கொண்டான்.

 

பெருந்தவம்   இயற்றினோர்க்கும்  -   மிகப்  பெரிய
தவத்தைச்  செய்த மேலோர்களுக்கும்; பேர்வு அரும் பிறவி
நோய்க்கு
-   போக்க   முடியாத   பிறவியாகிய   நோயைப்
போக்கும்; மருந்து என நின்றான்- அரிய மருந்து என்னும்படி
நின்ற இராமபிரான்;   தானே வடிக்கணை தொடுத்து- தானே
கூர்மையான அம்புகளைத்  தனது வில்லில் பூட்டி; கொல்வான்
இருந்தனன்
- அரக்கர்களை  யெல்லாம்   கொல்ல இருந்தான்;
நின்றது என் நாம் இயம்புவது?   -   அவ்வாறு  போரிடச்
சித்தமாக நின்ற செயல்பற்றி நாம்  என்ன   கூற   இருக்கிறது?
அரக்கர்  எல்லை   தீர்ந்த   அருந்தவம்   உடையர்
-
இராமபிரானால்    கொல்லப்பட    இருக்கும்     அரக்கர்கள்
எல்லோரும் அளவற்ற சிறந்த தவத்தைச் செய்தவராவார்; என்று
அகத்துட்கொண்டான்
-   என்று   மனத்துக்குள் நினைத்துக்
கொண்டான்.