பக்கம் எண் :

300யுத்த காண்டம் 

மருங்கு  உடை   வினையமும்  -  அந்த   மதிலிடத்தே
அமைந்திருக்கும்   வஞ்சக   வேலைப்பாடுகளும்;   பொறியின்
மாட்சியும்
- இயந்திரங்களின் சிறப்பும்;  இருங்கடி அரணமும்
- பெரிய   காவலையுடைய   மதிலும்; பிறவும்  எண்ணினால்
- மற்ற ஏற்பாடுகளையும் நினைத்துப் பார்த்தால்; சுருங்கிடும் -
ஆயுட்காலம் போதாதபடி சுருங்கிவிடும்; என் பல   சொல்லி
-   பலவற்றையும்   சொல்வதால்   என்ன   பயன்?;  சுற்றிய
கருங்கடல்   அகழது  
- சுற்றிலுமுள்ள கரிய பெரிய கடலே
இலங்கையின்  அகழியாயுள்ளது; நீரும் காண்டிரால்- நீங்களும்
நேரில் காணலாம்.
 

பலவகையான இயந்திரங்களைக் கொண்டிருப்பதை "பொறியின்
மாட்சி"   என்றார்.   மிகுந்த  காவலையுடைய மதிலை "இருங்கடி
அரணம்" என்றார். இன்னும் எத்தனையோ வகையான பொறிகளும்,
படைக் கலங்களும் உண்டு என்பதை 'பிறவும்' என்றார். 
 

(19)
 

வாயில் முதலியவற்றைக் காப்போர்
 

6535.

'வட திசை வயங்கு ஒளி வாயில் வைகுவோர்,
இடை இலர், எண்-இரு கோடி என்பரால்;
கடையுக முடிவினில் காலன் என்பது என்?
விடை வரு பாகனைப் பொருவும் மேன்மையோர்.
 

வடதிசை வயங்கு ஒளி வாயில் வைகுவோர்- இலங்கை
நகரின்   வடக்குத்   திசையில் உள்ள ஒளி விளங்கும் வாயிலில்
தங்கிக்;   காவல்   காப்பவர்கள்;   இடை   இலர் - எதற்கும்
பின் வாங்காத வலிமை உள்ளவர்கள்; எண் இரு கோடி என்பர்
- பதினாலு கோடி பேர்  என்பார்கள்;   கடையுக   முடிவினில்
-   யுகாந்த   காலமுடிவிலே;    காலன்     என்பது    என்
- உயிர்களையெல்லாம் கொல்லுகின்ற எமனைப் போன்றவர் என்று
எப்படிச் சொல்வது?;   விடை   வரு   பாகனை   -   காளை
வாகனத்திலே  வரும் சிவபிரானை; பொருவும் மேன்மையோர் -
ஒத்த பெருமை மிக்கவராவார்.
 

பொன்னாலும்   மணிகளாலும்   பொலிந்து  திகழும் வடதிசை
வாயிலை 'வயங்கு ஒளிவாயில்" என்றார். எவருக்கும் பின் வாங்காத
பெரு வலி படைத்த காவலர்களாதலின்   'இடை இலர்'   என்றார்.
காலன்   என்பதை   விடக்   காலகாலனான   சிவன்   என்பதே
பொருந்தும் என்பது கருத்து. இடைதல் - பின் வாங்குதல்.
 

(20)