இப்பாராட்டு, இந்திரசித்தன் வாயினிலே எப்பொழுது வருகிறது என்பதைக் கவனிக்க வேண்டும். தேரை இழந்து, சாரதி இழந்து, கொடியையும் இழந்து தனியனாய் நிற்கின்றான், இந்திரசித்து. இந்த நிலையில் சினமும், வெறுப்பும் தலைதூக்கி நிற்பதுதான் இயல்பு. ஆனால், ஒரு கடுகளவும் காழ்ப்புணர்ச்சி என்பது இல்லாமல் தன்னை இக்கதி செய்தவனை மேலே சொன்ன முறையில் பாராட்டுகிறான் என்றால், இந்திரசித்தனுடைய சிறப்பு ஈடு இணையற்றதாய், இமயம் போல் உயர்ந்துவிடுகிறது. கீழே நின்ற இந்திரசித்தனின் கவசத்தையும் இலக்குவன் பிளந்துவிட்ட நிலையில் இந்திரசித்தன் மறைந்துவிடுகிறான். | 'அவன் எதற்காக மறைந்தான்? மேலே என்ன செய்யப்போகிறான்' என்பதை 'விளைவினை அறியும் வென்றி' வீடணன்கூடத் தெரிந்துக்கொள்ளவில்லை. போரின் இடையே கிடைத்த ஓய்வு என்று வானரர்களும், இலக்குவனும் தங்கள் காயங்களைப்பற்றிக் கவனிக்கத் தொடங்கினர். விண்ணில் மறைந்த இந்திரசித்தன், நாகபாசத்தை எய்துவிட்டு, அரண்மனைக்குத் திரும்பி விடுகிறான். இலக்குவனை வென்றுவிட்டதாகவும், இராமன் போர்க்களத்தில் தென்படவில்லை என்பதாகவும் தந்தையிடம் கூறிவிட்டு ஓய்வு கொள்ளச் சென்றுவிட்டான். | அனைவரும் நாகபாசத்தில் பிணிப்புண்டதும், வீடணனைத் தவிர யாரும் களத்தில் நிற்கவும் இல்லை என்ற செய்தி இராமன் செவிகளுக்கு எட்ட, வெகுவேகமாக வந்த இராமன், இலக்குவன், மாருதி நிலைகண்டு கதறுகிறான். பக்கத்தில் நின்ற வீடணனைப் பார்த்து, 'இலக்குவனுக்கும், இந்திரசித்தனுக்கும் போர் தொடங்கிவிட்டது என்பதை உடனே எனக்குச் சொல்லி இருக்க வேண்டும்' என்ற கருத்தில், | "எடுத்த போர், இலங்கை வேந்தன் மைந்தனோடு இளைய | கோவுக்கு | அடுத்தது" என்று, என்னை வல்லை அழைத்திலை, அரவின் | பாசம் | தொடுத்த கை தலையினோடும் துணித்து, உயிர் குடிக்க, | என்னைக் | கெடுத்தனை; வீடண! நீ" | (8227) | என்று இராமன் பேசுகிறான். |
|
|
|