பக்கம் எண் :

346யுத்த காண்டம் 

வடிவுடையவர்கள்   செழுமையான  நெருப்பை   ஒத்த   திறம்
வாய்ந்தவர் என்றாலும் அவர்களுக்கு அஞ்சமாட்டார்; சிறுமை
கண்டவர்
- உருவத்திலே சிறுமையைப் பார்த்தவர்கள்; பெருமை
கண்டு   அல்லது   தேறார்
-   பெருமை,   வலிமைகளைக்
கண்டாலல்லது தெளிவு பெறமாட்டார்.
 

'மறுமை  கண்ட   மெய்ஞ்ஞானியர்'   என்போர்   முத்திப்
பேறடைந்த உண்மைமிக்க ஞானிகளாவார். அத்தகைய மேலோர்
இவ்வுலகத்துக்கு  வர   நேர்ந்தாலும்  அவர்களிடம்  ஏதேனும்
சிறப்பியல்புகள்  இருந்தால்   மட்டுமே   உலகத்தார்  மதிப்பர்;
இல்லையென்றால் 'யார்'  என்றே  கண்டு கொள்ள மாட்டார்கள்.
ஒருவரது சிறிய உருவத்தைப் பார்த்தவர்கள் - அச்சிறிய வடிவில்
கொழுந்து  விட்டெரியும்  கனல்  போன்ற ஆற்றலும் ஞானமும்
இருப்பதை   அறிந்து  போற்றார். சிறுமை  கண்டவர்  பெருமை.
வலிமைகளைக் கண்டால் அல்லது தெளிவடைந்து போற்றார்; இது
பிறிது  மொழிதலணியாம். உலகத்தார்  இயல்பைக் கூறி வருணன்
தன்னை மதித்து வராமைக்குக் காரணம் இதுவென  இராமபிரான்
கூறலானான்.
 

(14)
 

இராமபிரான் கடலின் மேல் அம்பு விடுதல்
 

6603.

திருதி என்பது ஒன்று அழிதர, ஊழியில் சினவும்

பருதி மண்டிலம் எனப் பொலி முகத்தினன், பல

கால்,

'தருதி, வில்' எனும் அளவையில், தம்பியும் வெம்பிக்

குருதி வெங் கனல் உமிழ்கின்ற கண்ணினன்

கொடுத்தான்.

 

திருதி  என்ப  தொன்று  அழிதர- மனவடக்கம்  என்ற
ஒன்று குறைந்திருப்பதால்; ஊழியில் சினவும் பரிதி மண்டிலம்
என
- ஊழிக் காலமுடிவில் சினந்து தோன்றும் சூரிய  மண்டிலம்
என்று கூறும்படியாக; பொலிமுகத்தினன்- பொலிந்து தோன்றும்
முகத்தினனான   இராமபிரான்; பலகால்  தருதி   வில் எனும்
அளவையின்
- பலமுறை 'வில்லைத்தா' என்று கேட்ட அளவிலே;
தம்பியும்   வெம்பி - தம்பியான   இலக்குவனும் வெகுளியால்
வெம்பி;  குருதி   வெங்கனல்   உமிழ்கின்ற  கண்ணினன்-
குருதியோடு, கொடிய தீப்பொறி உமிழும் கண்களை உடையவனாய்;
கொடுத்தனன்- இராமபிரானிடம் வில்லைக் கொடுத்தான்.