பக்கம் எண் :

348யுத்த காண்டம் 

பார் இயங்கு இரும் புனல் எலாம் முடிவினில் பருகும்

சூரியன் கதிர் அனையன சுடு சரம் துரந்தான்.
 

மாரியின்  பெருந்துளியினும்  வரம்பில  -   மழையின்
பெரியதுளிகளை   விட   அளவற்றவையும்;   வடித்த   சீரிது
என்றவை எவற்றினும்  சீரிய
- கூர்மையானவையும் சிறந்தவை
எனக் கூறப்படும்  எல்லாவற்றையும் விடச் சிறந்தவையும் ஆகிய
அம்புகளை; தெரிந்து  -   தேர்ந்து   எடுத்து;   பார்இயங்கு
இரும்புனல் எலாம்
- நிலத்தில் பரந்துள்ள நீரெல்லாவற்றையும்;
முடிவினில் பருகும்   சூரியன்  கதிர்  அனையன-  ஊழிக்
காலத்தின்   இறுதியில்   பருகுகின்ற   சூரிய    கிரணங்களைப்
போன்றவையும் ஆகிய; சுடு சரம் துரந்தான்-  வெப்பம் மிக்க
அம்புகளைக் கடல் மீது எய்தான்.
 

இராமன்  எய்த  அம்புகளின் மிகுதியை உணர்த்த 'மாரியின்
பெருந்துளியினும்    வரம்பில'    என்றார்.   வடித்த  -  நன்கு
கூராக்கப்பட்ட  சிறந்தவை  என்று  சொல்லப்படும்  ஆயுதங்கள்
எவற்றிலும்  சிறந்தவை  என்பதைச்  சீரிதென்றவை  எவற்றினும்
சீரிய' என்றார். நிலமெங்கும் பரந்து  நிறைந்திருக்கும் ஆற்று நீர்,
கடல்  நீர் மற்றுமுள்ள  எல்லா வகை  நீரையும்  'பார்  இயங்கு
இரும்புனல் எலாம்' என்றார்.
 

(17)
 

6606.

பெரிய மால் வரை ஏழினும் பெரு வலி பெற்ற

வரி கொள் வெஞ் சிலை வளர் பிறையாம் என வாங்கி,

திரிவ நிற்பன யாவையும் முடிவினில் தீக்கும்

எரியின் மும் மடி கொடியன சுடு சரம் எய்தான்.
 

பெரிய  மால் வரை ஏழினும்- பெரிய, கரிய மலைகளான
ஏழையும் விட; பெரு வலி பெற்ற- மிகுந்த வலிமையை உடைய;
வரி கொள் வெஞ்சிலை- கட்டமைந்த கொடிய வில்லை; வளர்
பிறையாம் என வாங்கி
- வளர்பிறைச் சந்திரன் எனக் கூறுமாறு
நாணால் வளைத்து; திரிவ  நிற்பன  யாவையும்- சரம், அசாம்
ஆகிய  எல்லாவற்றையும்; முடிவினில் தீக்கும்- யுகமுடிவிலே
தீய்த்து அழிக்கின்ற; எரியின் மும்மடி கொடியன - நெருப்பை
விட மூன்று மடங்கு கொடியனவான; சுடு  சரம் எய்தான்- சுடு
சரங்களை இராமபிரான் கடலின் மீது எய்தான்.
 

மால்வரை  ஏழு - ஏழு பெரிய மலைகள் கைலை,  இமயம்,
மந்தரம்   விந்தம்  நிடதம்   ஏமகூடம்,  நீலகிரி  என்பனவாம்
"இச்சிலை கிடக்க மலை  ஏழையும் இறானோ" என முன்பு (1152)
கூறியது காண்க.
 

(18)