பக்கம் எண் :

 வருணனை வழி வேண்டு படலம் 349

இராமன் அம்புகளால் கடல்பட்டபாடு
 

6607.

மீனும் நாகமும் விண் தொடும் மலைகளும் விறகா,

ஏனை நிற்பன யாவையும் மேல் எரி எய்த,

பேன நீர் நெடு நெய் என, பெய் கணை நெருப்பால்

கூனை அங்கியின் குண்டம் ஒத்தது, கடற் குட்டம்.
 

மீனும் நாகமும்  விண் தொடும்  மலைகளும்  விறகா-
கடலில்  உள்ள  மீன்களும், நாகங்களும்  விண்ணைத்  தொடும்
மலைகளும் விறகாகவும்; ஏனை  நிற்பன  யாவையும்- மற்றும்
அங்கு  நிற்கும்   மரங்களும்; மேல்  எரி  எய்த-  கடல்மீது
நெருப்புப்பற்றி  எரிதலால்; பேன   நீர்  நெடு  நெய்  என-
நுரையோடு கூடிய கடல் நீர் எல்லாம் நெய்யாகவும்; பெய்கணை
நெருப்பால்
-  இராமன்   கடல்மீது   விட்ட   அம்புகளாகிய
தீயினால் ; கடற்குட்டம்-   அக்   கடலாகியபள்ளம்;   கூனை
அங்கியின் குண்டம் ஒத்தது
- வளைந்த நெருப்பெரியும்  யாக
குண்டத்தை ஒத்திருந்தது.
 

கடற்குட்டம் அங்கியின் குண்டம் ஒத்தது  என்பது கருத்து.
பேனம் - நுரை  கூனை - வளைவு. குட்டம் - பள்ளம் (குட்டை)
கடலை  இழித்துக்  குட்டம்  என்றார். உருவகத்தை உறுப்பாகக்
கொண்ட தற்குறிப்பேற்ற அணி; உருவகம் எனினுமாம்.
 

(19)
 

6608.

பாழி வல் நெடுங் கொடுஞ் சிலை வழங்கிய பகழி,

ஏழு வேலையும் எரியொடு புகை மடுத்து ஏகி,

ஊழி வெங் கனல் கொழுந்துகள் உருத்து எழுந்து

ஓடி,

ஆழி மால் வரைக்கு அப் புறத்து இருளையும்

அவித்த.

 

பாழிவல்   நெடுங்   கொடுஞ்சிலை- இராமபிரானுடைய
பெரிய, வலிய நெடிய, கொடிய வில்; வழங்கிய பகழி- வழங்கிய
அம்புகள்; ஏழு வேலையும் எரியொடு புகைமடுத்து ஏகி-ஏழு
கடல்களிலும் நெருப்புடன் புகையை நிறைத்துக் கொண்டு சென்று;
ஊழிவெங்கனல் கொழுந்துகள்-  ஊழிக்காலத்தில்  தோன்றும்
வெம்மையான  தீயினது   கொழுந்துகளைப்   போல;, உருத்து
எழுந்து  ஓடி
- சினந்து  எழுந்து  ஓடி; ஆழிமால்  வரைக்கு
அப்புறத்து
- சக்கரவாள கிரிக்கும் அப்புறத்துள்ள; இருளையும்
அவித்த
- இருட்டையும் அணைத்தன (நீக்கின).