பக்கம் எண் :

350யுத்த காண்டம் 

பாழி - பெரிய அம்புகள். ஏழு கடல்களையும்  நெருப்பாலும்
புகையாலும்  நிரப்பிக்  கொண்டு  சென்றனவாதலின்  'எரியொடு
புகை    மடுத்தேகி'   என்றார்,   யுகாந்த   காலத்துப்   பெரு
நெருப்பின் கொழுந்துகள் போல, அம்புகள் சினந்து சீறி எழுந்து
ஓடின என்றார். உருத்து - சினந்து ஆழிமால்வரை - சக்கரவாள
கிரி. ஏழு கடல்களுக்கு அப்பால் சக்கரவாள கிரியும், அக்கிரிக்கு
அப்பால் இருள்  சூழ்ந்த  இடமும் உள்ளன  என்பது  புராணக்
கொள்கை.   அத்தொலைவிலுள்ள   இருளையும்  இராமபிரானது
அம்புகள் நீக்கின என்றார்.
 

(20)
 

6609.

மரும தாரையின் எரியுண்ட மகரங்கள் மயங்கிச்

 

செரும, வானிடைக் கற்பக மரங்களும் தீய,

நிருமியா விட்ட நெடுங் கணை பாய்தலின்,

நெருப்போடு

உருமு வீழ்ந்தெனச் சென்றன, கடல்-துளி உம்பர்.
 

மருமதாரையின் எரியுண்ட மகரங்கள்- அம்பு தைத்தலால்
உயிர்  நிலையில்  எரியுண்ட  மகரமீன்கள்; மயங்கிச்  செரும-
மயக்கமுற்று நெருங்கவும்; வானிடைக் கற்பக மரங்களும் தீய-
விண்ணுலகத்திலுள்ள   கற்பக  மரங்களும்  தீய்ந்து   போகவும்;
நிருமியாவிட்ட  நெடுங்கணை   பாய்தலின்-  இராமபிரான்
சங்கற்பித்து விட்ட  நெடிய அம்புகள் பாய்தலால்; நெருப்போடு
உருமு  வீழ்ந்தென
- நெருப்புடன்  இடியும் சேர்ந்து விழுந்தது
போல்; கடல் துளி உம்பர்  சென்றன-  கடல்நீர் விண்ணுக்குச்
சென்றது.
 

மருமதாரை - உயிர்  நிலை  பெற்ற  இடம்  (மர்மஸ்தானம்)
மகரம்  -  சுறாமீன்.  செரும -  நெருங்க.  நிருமியா  விட்ட  -
தொகுத்து விட்ட  சங்கற்பித்துவிட்ட என்பதுமாம். மருமதாரை
மறைந்து வாழும்  இடமுமாம். கடலின் அடிப்பகுதியில் மறைந்து
வாழும் சுறாமீன்கள் எரியுண்டு மயங்கி மேற்பரப்பிலே நெருங்கிப்
பரந்தன  விண்ணுலகத்துக்  கற்பக  மரங்கள்  தீய்ந்து   கருகிய
இராமபாணம் கடலிலும், விண்ணிலும் சென்றுதாக்கி நிலைகுலையச்
செய்தன எனவுமாம்.
 

(21)
 

6610.

கூடும் வெம் பொறிக் கொடுங் கனல்

தொடர்ந்தெனக் கொளுந்த,

ஓடும் மேகங்கள் பொரிந்து இடை உதிர்ந்தன; உம்பர்

ஆடும் மங்கையர் கருங் குழல் விளர்த்தன-

அளக்கர்க்

கோடு தீந்து எழ, கொழும் புகைப் பிழம்பு மீக்

கொள்ள.