பக்கம் எண் :

360யுத்த காண்டம் 

மறிந்தன கரிந்தன வானப்புள் எலாம்- நெருப்புப் பற்றியதால்,
ஆண்பறவைகளெல்லாம் வீழ்ந்து கருகி மாண்டன.
 

துணையைப்  பிரிந்தவர்கள்   துன்பம்    அனுபவிப்பார்கள்
என்பதை இராமபிரான் அறியாதிருக்க முடியாது. அப்படி அறிந்த
பெருமானே  பெண்  பறவைகள்  இறந்து  போகும்படி  செய்து
விட்டானே என்று சொல்லிக் கொண்டே தம்  பேடுகளை நாடிச்
சென்ற ஆண் பறவைகள் கனலில் வீழ்ந்து மாண்டன.- இது இச்
செய்யுளில்  கற்பனை  செய்து  உரைக்கும்  செய்தி. 'பிரிந்தவர்'
என்ற  சொல்  எதுகை   நோக்கிப்  'பிறிந்தவர்'  என  வந்தது.
மறிந்தன (வாய்): முற்றெச்சம். ஓர்-அசை.
 

(37)
 

6626.

கமை அறு கருங் கடல், கனலி கைபரந்து,

அமை வனம் ஒத்த போது, அறைய வேண்டுமோ?

சுமையுறு பெரும் புகைப் படலம் சுற்றலால்,

இமையவர் இமைத்தனர்; வியர்ப்பும் எய்தினார்.
 

கமை  அறு  கருங்கடல் -  பொறுமையற்று  எப்போதும்
முழங்கிக்  கொண்டிருக்கும்  கரிய கடல்; கனலி  கை பரந்து-
இராமபிரான்   எய்த    அம்புகளால்   உண்டான    நெருப்பு
பக்கங்களிலெல்லாம் பரவ;  அமை  வனம்  ஒத்த  போது-
தீப்பிடித்  தெரிந்த மூங்கிற் காட்டை ஒத்திருந்தபோது; அறைய
வேண்டுமோ
-  அதைக்   கூற  வேண்டுமோ?; சுமை  உறு
பெரும்புகைப்படலம்  சுற்றலால்
- சுமை  பொருந்திய பெரிய
புகைப்படலம்  சூழ்ந்தமையால்;   இமையவர்  இமைத்தனர்-
இமையா    நாட்டம்    கொண்ட   தேவர்கள்    கண்களை
இமைக்கலாயினர்;    வியர்ப்பும்  எய்தினர்  -  உடம்பில்
வியர்வையும் எய்தினார்கள்.
 

கமை - பொறுமை, கடல் எப்போதும் ஓய்வின்றி முழங்கிக்
கொண்டே  இருப்பதால்  'கமை  அறு  கருங்கடல்'  என்றார்.
எங்கும்  நெருப்பு பரவி எரிந்து கொண்டிருப்பது, மூங்கிற்காடு
தீப்பிடித் தெரிவதை  ஒத்திருந்தது என்பதை கனலி கை பரந்து
அமைவனம் ஒத்தபோது' என்றார். அமை - மூங்கில்.
 

(38)
 

6627.

பூச் செலாதவள் நடை போல்கிலாமையால்,

ஏச்சு எலாம் எய்திய எகினம் யாவையும்,

தீச் செலா நெறி பிறிது இன்மையால், திசை

மீச் செலா; புனலவன் புகழின் வீந்தவால்.