6629. | பட்டன படப் பட, படாத புட் குலம், |
| சுட்டு வந்து எரிக் குலப் படலம் சுற்றலால், |
| இட்டுழி அறிகில, இரியல் போவன, |
| முட்டை என்று எடுத்தன, வெளுத்த முத்து எலாம். |
| |
சுட்டு வந்து எரிக்குலப் படலம் சுற்றலால்- சுட்டுக் கொண்டே வந்த நெருப்புப் படலம் எங்கும் சூழ்ந்து இருத்தலால்; பட்டன படப்பட-பறவைக் கூட்டம் தீயில் வெந்து இறப்பன இறந்து கொண்டே இருக்க; படாத புட்குலம்- இறக்காத பறவைக் கூட்டம்; இட்டுழி அறிகில- புகையும் நெருப்பும் சூழ்ந்திருத்தலால் தமது முட்டைகளை இட்ட இடத்தை அறியாதனவாய்; இரியல் போவன- பாதுகாப்பான வேறு இடத்துக்குச் செல்லுபவை; வெளுத்த முத்து எலாம்- வெண்மை நிறமான முத்துக்களை எல்லாம்; முட்டை என்று எடுத்தன- முட்டை என நினைத்து எடுப்பனவாயின. |
எரிக்குலப்படலம் - நெருப்பின் தொகுதி. இட்டுழி -(முட்டை) இட்ட இடம். |
(41) |
6630. | 'வள்ளலை, பாவிகாள், "மனிசன்" என்று கொண்டு |
| எள்ளலுற்று அறைந்தனம்; எண் இலாம்' என |
| வெள்ளி வெண் பற்களைக் கிழித்து, விண் உறத் |
| துள்ளலுற்று இரிந்தன-குரங்கு சூழ்ந்தில. |
| |
பாவிகாள்- பாவிகளே! வள்ளலை மனிசன் என்று கொண்டு - இராமபிரான் மனிதன் தானே என நினைத்து; எள்ளலுற்று அறைந்தனம் - ஏளனமாகப் பேசினோம்; எண் இலாம்- இராமபிரானுடைய பேராற்றலை அறியும் ஆராய்ச்சி இல்லாதவரானோம்; என வெள்ளி வெண் பற்களைக் கிழித்து- என்று கூறி வெள்ளி போன்ற வெண்மையான பற்களைக் காட்டி இளித்துக் கொண்டு; குரங்கு சூழ்ந்தில- நீரில் வாழும் குரங்குகள் அந்தக் கடலைச் சூழ்ந்து கொண்டிருக்காமல்; விண்உறத் துள்ளலுற்று இரிந்தன- வானத்தின் மீது துள்ளி விலகிச் செல்லலாயின. |
புனலை, கனலாகச் செய்த இராமபிரானைச் சாதாரண மனிதன்தானே என்று எண்ணி இத் துன்பத்தை அனுபவிக்க நேர்ந்ததே என்ற குரங்குகளின் தவிப்புத் தெரிகிறது. குரங்குகள் பற்களைக் காட்டி இளிப்பது இயல்பு என்பதால் 'பற்களைக் கிழித்து' என்றார். |
(42) |