பக்கம் எண் :

364யுத்த காண்டம் 

உறு சினம் உறப் பல உருவு கொண்டன,

குறுமுனி எனக் கடல் குடித்த-கூர்ங் கணை.
 

குறுமுனி எனக் கடல்  குடித்த  கூர்ங்கணை-  குறுகிய
வடிவினரான அகத்திய முனிவரைப் போல, கடல் நீரை எல்லாம்
குடித்த  (இராமபிரான்  எய்த)  கூரிய   அம்புகள்;   செறிவுறு
செம்மைய
- செறிவுற்று செம்மை  வாய்ந்தன;  தீயை  ஓம்புவ-
தீயை  வளர்ப்பன; நெறியுறு  செலவின-  நெறியில்  செல்லும்
செலவினை  உடையன; தவத்தின்  நீண்டன- நெடியதவத்தை
உடையன; உறுசினம்  உற-  மிக்க கோபம் கொண்டிருப்பதால்;
பல உருவு கொண்டன- பல வடிவங்களைக் கொண்டன.
 

குறுமுனி  -   அகத்தியர்.   ஓம்புதல்.   விரும்பிவளர்த்தல்.
உறுசினம். மிகுந்த  கோபம். அம்புகள்  குறுமுனிவரைப் போலக்
கடல் நீரைக்  குடித்தன   எனக்   கூறவந்தவர் குறுமுனிக்கும்,
அம்புக்கும்   சிலேடைகூறினார்.  இது   செம்மொழிச்சிலேடை.
அகத்தியர்: செம்மை உடையவர்; வேள்வித்தீயை  வளர்ப்பவர்;
நன்னெறியில்  செல்லுபவர்;  நீண்டதவம் உடையவர்; சினத்தால்
பல வடிவம் கொள்பவர்; கடலைக் குடித்தவர் அம்புகள்: தீயைப்
போலச்   செம்மை   நிறம்  உடையவை;  தீயை  வளர்ப்பவை;
செலுத்தும்  நெறியே  செல்லுபவை; இராமன் கை தீண்ட தவம்
உடையவை; கோபத்தால் பல வடிவம் கொள்பவை; கடல் நீரைப்
பருகியவை.
 

(45)
 

6634.

மோதல் அம் கனை கடல் முருக்கும் தீயினால்,

பூதலம் காவொடும் எரிந்த; பொன் மதில்

வேதலும், இலங்கையும், 'மீளப் போயின

தூதன் வந்தான்' எனத் துணுக்கம் கொண்டதால்.
 

மோதல்  அம்  கனைகடல்- அலைமோதுகின்ற  முழங்கு
கின்ற கடலில்  பற்றி;  முருக்கும்  தீயினால்-  முழக்கத்துடன்
எரிகின்ற   நெருப்பினால்;   பூதலம்   காவொடும்   எரிந்த-
கடலைச் சூழ்ந்துள்ள நிலமெல்லாம் அங்குள்ள சோலைகளோடும்
எரிந்தது;  பொன்  மதில்  வேதலும்- இலங்கைக்கு அரணாக
அமைந்துள்ள   பொன்னாலான  மதிலும்   வெந்து   போகவும்;
இலங்கையும்- இலங்கையில்  வாழும்  அரக்கர்கள்   எல்லாம்;
போயின   தூதன்  மீளவந்தான்  என   -  இங்கு   வந்து
இலங்கைக்கு எரியூட்டிப்  போன  தூதன்   மீண்டும்   வந்தான்
என்று; துணுக்கம் கொண்டதால்- திடுக்கிட்டனர்.