பக்கம் எண் :

56   யுத்த காண்டம்

இருபது கைகளையும் பயன்படுத்தி இலக்குவனைத் தூக்க முயல்கிறான்.
மாபெரும் தவமும் ஈடு இணையற்ற வலிமையும்   உடைய இராவணன்
இரண்டு கைகளை உடைய இலக்குவனை தன் இருபது   கரங்களாலும்
தூக்க முடியாமைக்கு பேரா. டாக்டர். ம.ரா.போ.  குருசாமி ஒரு முறை
கூறிய விளக்கத்தை இங்கு காண்பது மிகவும்  பொருத்தமுடையதாகும்.
இராவணனின் அளப்பறிய வரம் என்னும்  பாற்கடலை சில நாட்களாக
சீதை என்னும் பிறை கடையிட்ட பாற்கடலைத் தயிர்க் கடலாக மாற்றி
விட்டது. நேர்மையற்ற  காமம், தன் ஆற்றல் முழுவதையும் சல்லடைக்
கண்களாக துளைத்து  விட்டமையின் இப்பொழுது இராவணன் பழைய
இராவணன் இல்லை.   காமத்தால் வலிவிழந்த இராவணன் இப்பொழுது
தூக்க முயன்றது   யாரை?    மணம்   செய்து  கொண்டும் ஏறத்தாழ
பதினான்கு  ஆண்டுகளாகத்தன் நாயகன் திருவடி தவிர காமம் உள்பட
வேறு    ஒன்றையும்    தன்     மனத்தில்   வினாடியும் நினையாமல்
உறக்கத்தையும் துறந்து பிரம்மச்சரிய விரதத்தில்   தலைநின்றவனாகிய
இளைய பெருமாளை   அல்லவா   இராவணன் தூக்க   முயலுகிறான்.
பிரம்மசரியத்தை       காமம்     தூக்க   முடியாமல்    போனதில்
வியப்பொன்றுமில்லை. இக் கருத்து ஏற்றுக்கொள்ளக் கூடியதே.
 

இராவணன் முயற்சி பலியாமல் போனபொழுது, அனுமன் சேயை
எடுக்கும்    தாய்போல்   இலக்குவனை எடுத்துச் சென்றான் என்று
கவிஞன் பேசுவது  இக்கருத்தை வலியுறுத்துகிறது. அனுமன் பிறந்தது
முதலே    மாதர்   நலம் பேணாதவனாக, நைட்டிக பிரம்மச்சாரியாக
இறைவன் திருவடிகளைத்   தவிர வேறு ஒன்றையும் நினையாதவனாக
வாழ்பவன் அல்லவா?    எனவே, அனுமன் எளிதாக இலக்குவனைத்
தூக்கிச் சென்றான் என்று    கவிஞன் கூறுவது பொருத்த முடையதே
ஆகும்.      பதினான்கு    ஆண்டு    பிரம்மச்சரியத்தை நைட்டிக
பிரம்மச்சரியம் எளிதாகத் தூக்கியதில் வியப்பொன்றுமில்லை. ஆனால்,
கயிலையைத் தூக்கிய இருபது   கைகளாலும்  இலக்குவனைத் தூக்க
முடியாமல் போனதற்குக்  காரணத்தைக் கவிஞன் பின்வரும் பாடலில்
வேறுவிதமாகக் கூறுவது சிந்திக்கத் தக்கதாகும்.