பக்கம் எண் :

57   யுத்த காண்டம்

'அடுத்த நல் உணர்வு ஒழிந்திலன், அம்பரம் செம் பொன்
உடுத்த நாயகன் தான் என உணர்தலின்; ஒருங்கே
தொடுத்த எண் வகை மூர்த்தியைத் துளக்கி, வெண்பொருப்பை
எடுத்த தோள்களுக்கு எழுந்திலன் - இராமனுக்கு இளையான்.1

(7226)
 

இப்பாடலின் முதல் மூன்று அடிகளும் பலரும் பல்வேறு விதமாக
உரை  காண    இடந்தந்து     நிற்கின்றன. உணர்வு இழந்த மயக்க
நிலையில்   அவன்   இல்லை. சிவந்த பொன்னால் ஆகிய உடையை
(பீதாம்பர) உடுத்த   நாயகன்    ஆகிய    திருமால்  தானே என்று
நினைந்து இலக்குவன்   கிடந்தான் ஆதலின் அட்ட   மூர்த்தியாகிய
சிவபெருமான் இருக்கும் கைலாய மலையைப்   பெயர்க்க    முயன்ற
இராவணன்    தோள்களுக்கு    இலக்குவனை   எடுக்கும் ஆற்றல்
இல்லாமல் போனது.
 

கீழே   கிடக்கும்   இலக்குவன்,  என்ன  நினைத்துக்கொண்டு
கிடந்தான் என்பதை முதலடியின் கடைசிப் பகுதியும்,    இரண்டாம்
அடியும்     விளக்கிச்    செல்கின்றன. பாடல் இருக்கும் வகையில்
இலக்குவன் தன்னைத் திருமால் என்றே நினைத்து     கொள்கிறான்
என்ற பொருள் வருகிறது. அப்படியானால் தன்  முனைப்பு  நீங்காத
இலக்குவன் தன்னைப் பரம்பொருள் என்று  நினைத்துக்கொண்டான்
என்பது    இந்நாட்டு   மரபுடன்   பொருந்தாத  நிலையே ஆகும்.
அகங்காரத்தை இழக்காதவர்கள் எண்ண ஓட்டத்தில் தோன்றும் ஒரு
கருத்தாகும் இது.
 

ஒவ்வோர் உயிருள்ளும், அந்தர்யாமியாய் இருக்கும் பரம்பொருள்
இலக்குவனின்     இந்த    எண்ண   ஓட்டத்தை அறிந்துகொண்டு
இலக்குவனுக்குப்    புத்தி    கற்பிக்க  வேண்டும் என்ற நினைவில்
இருந்தான் என்று நினைப்பதில் தவறில்லை.
 

இந்திரசித்தனை வெல்ல முடியாத நிலையில் இலக்குவன் தானே
பரம்பொருள்    என்ற   நிலையை  விட்டுவிட்டு, சரணாகதி  என்ற
நிலையில்    வேதங்களும்,   அந்தணர்களும்   வணங்கத்   தக்க
பரம்பொருள் இராமன் என்பது உண்மையானால்  இப்பிறைமுகவாளி
இந்திர சித்தனைக் கொல்க என்று ஏவி, அதில் வெற்றியும்  பெற்று
விட்டான். அம்பரம் உடுத்த நாயகன் தான் என்ற நிலை
 


1. இக்கருத்து வான்மீகியின் பால காண்டம் 18வது சருக்கம்,
11, 12,ம் பாடல்களை ஒட்டி எழுந்த கருத்தாகும்.