பக்கம் எண் :

58   யுத்த காண்டம்

மாறி,    இராமன்மேல்  பாரத்தைப் போட்டு வெற்றியும்  கண்டான்.
இலக்குவன்    முதலில்  இழைத்த  பிழை தானே தலைவன் என்று
எண்ணியது.   அப்பிழைக்குத்  தண்டனைதான்   'இந்திர சித்தனை
வென்றது நீயல்ல' என்ற இராமன் சொற்கள்.
 

இவ்வாறு பொருள் கொள்வதால், இளைய பெருமாளுக்கு ஊறு
செய்துவிட்டோம்   என்று   வருந்தினால்   அதைப் போக்க ஒரு
வழிதான் உண்டு. முதற்போர்புரி படலத்தில் வரும் பாடலில் வரும்
'தான்' என்ற சொல்லுக்குப் பதிலாக தாள் (திருவடி)  என்று பாடம்
கொண்டால் இதனைத் தவிர்க்கலாம்.  அப்படியாயின்  அந்த அடி
'உடுத்த நாயகன் தாள் என உணர்தலின்' என்று நிற்கும். அதாவது,
நாயகன் திருவடிகளே   சரணம்   என்று   அதற்குப்    பொருள்
கொண்டால் இக்குறை   நீங்கிவிடும்.    திருவடிகளைச்    சரணம்
அடைந்த ஒருவனை இராவணன்   தூக்க  முடியவில்லை என்பதும்
பொருத்தமாக அமைந்துவிடும்.
 

அடுத்து   வரும் படைத்தலைவர் வதை, மகரக்கண்ணன்  வதை
என்ற     படலங்கள்    நாகபாசப்படலத்திற்கும்,     பிரம்மாத்திரப்
படலத்திற்கும் இடையே வருபவை ஆகும். எதிர்பாராத விளைவுகளை
உண்டாக்கும் பிரம்மாத்திரப்   படலத்திற்கு முன், கற்பவர்  மனத்தில்
ஒரு    சிறு அமைதி ஏற்படுத்துவதற்காகச் சாதாரண  நிகழ்ச்சிகளைக்
கொண்ட    இரண்டு    படலங்களை,   பிரம்மாத்திரத்திற்கு முன்னர்
வைக்கின்றான் கம்பநாடன்.
 

நாகபாசம் எய்தியமையாலேயே தனக்கு, வெற்றி கிட்டி   விட்டது
என    மகிழ்ந்த   இந்திரசித்தனுக்குக் கருடன் வரவால் இலக்குவன்
முதலியோர்     உயிர் பெற்றனர் என்பது   தெரிந்தவுடன் நம்பிக்கை
தளர்வதாயிற்று.    அவனிடம் உள்ள  படைக்கலங்களுள்   தலைமை
இடத்தைப் பெறுவது நான்முகன் படை  ஆகும். முன்னரே நான்முகன்
படையை ஏவ, இலக்குவன் எத்தனித்த   போது,   இராமன் அதனைத்
தடை செய்துவிட்டான் என்பதை இந்திரசித்தன் நன்கு அறிந்திருந்தான்.
நான்முகன்  படையின்    கொடுமையை  அஞ்சி இருவருமே இதுவரை
அதனைப்  பயன்படுத்தாமல் இருந்து விட்டனர். ஆனால், இப்பொழுது
நிலைமை    முற்றிலும்    மாறிவிட்டது. நாகபாசத்தைக் கருடன் வந்து
தவிர்ப்பான்    என்பதை    இந்திரசித்தன்    கனவிலும்  நினைத்துப்
பார்க்கவில்லை. அவன் பெரிதாக நம்பியிருந்த நாகபாசம்