பக்கம் எண் :

406யுத்த காண்டம் 

பாந்தள்-   மலையிலே  வாழ்ந்த   பெரிய  மலைப்  பாம்புகள்;
மறம்  கிளர் மான  யானை வயிற்றினவாக- தாம் ஏற்கனவே
விழுங்கிய வலிமைமிக்க  பெரிய  யானைகள்  தமது  வயிற்றிலே
இருக்க;  வாய்  சோர்ந்து   உறங்கின-  வாயைத்  திறந்தபடி
உறங்கிக் கொண்டு  கிடந்தன; உணர்விலாதார்  கேடுற்றாலும்
உணர்வரோ
- அறிவில்லாதவர்கள்,  தமக்குக் கேடு நேர்ந்தாலும்
உணர்வரோ? (மாட்டார் என்பது கருத்து)
 

கறங்கு -  காற்றாடி,   வேகக்   கவிக்குலம்   -   விரைந்து
செல்லும் வானர சேனை. கதுவ வாங்கி - பற்றிப் பிடுங்கி. பாந்தள்
- பாம்பு.  "கரிய  மாமுகில்  படலங்கள்  கிடந்தவை  முழங்கிடக்
களிறென்று.  பெரிய  மாசுணம் வரை எனப் பெயர்தரு பிரிதி எம்
பெருமானை"   என்ற   பெரிய   திரு    மொழியாலும்   (1.2.10)
மலைப்பாம்புகள் யானைகளை  விழுங்கும்  என்பது   புலனாகும்.
யானைகளை   விழுங்கிய  பாம்புகள்   வாய்திறந்தபடி  உறங்கிக்
கிடந்தன.   அவை  வசிக்கும்  மலைகளை  அப்  பாம்புகளோடு
வானரங்கள்  கடலில்  வீசியதைச் சிறிதும் அறியாதனவாயிருந்தன
என்பதால், அறிவற்றவர்   கேடுநேர்ந்தாலும்   உணரமாட்டார்கள்
என்பது பெறப்படும். இதுவும் வேற்றுப் பொருள் வைப்பணி.
 

(20)
 

6694.

இழை எனத் தகைய மின்னின் எயிற்றின, முழக்கம்

ஏய்ந்த,

புழையுடைத் தடக் கை ஒன்றோடு ஒன்று இடை

பொருந்தச் சுற்றி,

கழையுடைக் குன்றின் முன்றில், உருமொடு கலந்த

கால

மழை எனப் பொருத-வேலை மகரமும் மத்த மாவும்.
 

வேலை   மகரமும்   மத்தமாவும்-   கடலில்   வாழும்
மகரமீனகளும், மலைகளில் வாழ்ந்த மதம் கொண்ட யானைகளும்;
இழை எனத்தகைய மின்னின்  எயிற்றின- அணிகலம் என்னத்
தகுந்த மின்னலைப்  போல ஒளி  வீசும் பற்களை உடையனவாய்;
புழை  உடைத்தடக்கை-  துவாரத்தை  உடைய துதிக்கைகளை;
ஒன்றோடு  ஒன்று  இடை  பொருந்தச்  சுற்றி -  ஒன்றுடன்
மற்றொன்று இடையே  பொருந்தும்படி  சுற்றிக் கொண்டு; கழை
உடைக்  குன்றின் முன்றில்
- மூங்கில்களையுடைய மலைகளின்
முன்னே;  உருமொடு  கலந்த  காலமழை  எனப்  பொருத-
இடியோடு கூடிய யுகாந்த காலத்து மேகங்களைப் போலப்  போர்
புரிந்தன.