பக்கம் எண் :

414யுத்த காண்டம் 

6707.

பாரினாள் முதுகும் நெடும் பாழ்பட,
மூரி வானரம் வாங்கிய மொய்ம் மலை
வேரின் ஆம் என, வெம் முழையின்னுழை
சோரும் நாகம் நிலன் உறத் தூங்குமால். 
 

பாரினாள் முதுகும் நெடும்  பாழ்பட -   நிலமகளுடைய
முதுகும்   நெடிதே   பாழாகும்படி;   மூரிவானரம்   வாங்கிய
மொய்ம்மலை
- வலிமை  மிக்க  வானரங்கள் எடுத்த நெருங்கிய
மலை; வேரின்  ஆம் என- வேர்களோ என்று தோன்றும் படி;
வெம் முழையின் உழை-   கொடிய   மலைக்குகைகளிலிருந்து;
சோரும்   நாகம்   நிலனுறத்   தூங்குமால்-  வெளிப்பட்ட
பாம்புகள் நிலத்திலேபடும்படி தொங்கிக் கொண்டிருக்கும்.
 

'மலையின்  வேரின்  ஆம்' - மலைக்கும்  வேர் இருக்கிறது
என்று   கூறும்படி.   மலைகளை   வானரங்கள்   தூக்குவதால்,
குகைகளிலிருந்து  வெளிப்பட்ட  பாம்புகள்  நிலத்தில்  படும்படி
தொங்கிக் கொண்டிருப்பது மலையின் வேர்களைப் போலிருந்தது.
இது தற்குறிப்பேற்றவணியாகும். முழை - குகை. உழை - இடம்.
 

(34)
 

6708.

அருணச் செம் மணிக் குன்று அயலே சில
இருள் நற் குன்றம் அடுக்கின, ஏய்ந்தன-
கருணைக் கொண்டல், 'வறியன் கழுத்து' என
வருணற்கு ஈந்த வருண சரத்தையே.
 

அருணச் செம்மணிக் குன்று அயலே- செம்மை நிறத்தை
உடையதான  மாணிக்க மலைகளுக்குப் பக்கத்திலே; சில இருள்
நற்குன்றம்    அடுக்கின
-   சில  இருள்  நிறம்    வாய்ந்த
நீலமலைகள் அடுக்கப்பட்டுக் கிடப்பன; கருணைக் கொண்டல்-
கருணை  பொழியும்   மேகம்   போன்றவனாகிய   இராமபிரான்;
வறியன்   கழுத்து  என-   தனது  மாலையை  அடியுறையாக
எனக்குக் கொடுத்த  இவன்  வெறும்   கழுத்தினனாயிருக்கிறான்
என்று;   வருணற்கு   ஈந்த   வருண  சரத்தை  ஏய்ந்தன-
வருணனுக்கு    வழங்கிய   பலநிறமணி   மாலையை   ஒத்துக்
காணப்பட்டன.
 

அருணம் - செந்நிறம். செம்மணி  - மாணிக்கம். நல்குன்றம்
- நீல  மலை. நல்ல  பாம்பு.  கருநாகம்  என்ற  ஆட்சி காண்க.
தெலுங்கு  மொழியில்  நல்ல  என்ற  சொல்   கருமை   என்ற
பொருளில்  வழங்கும். வருணன்  தனது மணி மாலையைத் தந்து
விட்டமையால்,      வெறும்      கழுத்தை     உடையவனாக
இருக்கிறானென்று பல நிற மணி மாலையை