பக்கம் எண் :

416யுத்த காண்டம் 

தக்கது. 'துவலையசால்' ஆல் என்ற மூன்றாவதனுருபு 'ஓடு' என்ற
பொருளில் வந்தது.
 

(37)
 

6711.

நீலன் இட்ட நெடு வரை நீள் நில
மூலம் முட்டலின், மொய் புனல் கைம்மிக,
கூலம் இட்டிய ஆர்கலி கோத்ததால்,
ஓலமிட்டு எழுந்து ஓடி, உலகு எலாம்.
 

நீலன் இட்ட நெடுவரை- அக்கினி தேவனது அம்சமான
நீலன் என்ற வானரத் தலைவன் கடலில்  இட்ட நீண்ட  மலை;
நீள் நிலமூலம் முட்டலின்- நீண்ட இந்தப் பூமியின் அடிவரை
(பாதாளம்)   சென்று   முட்டுவதால்;  மொய்புனல் கைம்மிக-
மிகுந்த தண்ணீர் எல்லைகடந்து  செல்வதால்; கூலம்  இட்டிய
ஆர்கலி
- கரை சிறியதாகிய  அக்கடல்; ஓலம் இட்டு எழுந்து
ஓடி
- முழக்கமிட்டுக் கொண்டு மேலெழுந்து ஓடி; உலகு எலாம்
கோத்தது
- உலகமெல்லாம் சென்று பாய்ந்தது.
 

நீலன் - வானரத்  தலைவன் ஒருவன்;  அணை கட்டியவன்.
நிலமூலம் -  நிலத்தின்  அடிப்பகுதி  (பாதாளம்).   முட்டுதல் -
தாக்குதல்.  கைம்மிக - எல்லைகடந்து  செல்ல  கூலம்  - கரை
இட்டிய - சிறிதான ஆர்கலி  -  கடல்   (ஒலித்துக்  கொண்டே
இருப்பது)
 

(38)
 

6712.

ஒருவன் ஆயிரம் யோசனை ஓங்கிய
அருவி மால் வரை விட்டு எறிந்து ஆர்த்தலால்,
மருவு வான் கொடி மாடஇலங்கையில்
தெரு எலாம் புக்கு உலாய, தெண்ணீர்அரோ.*
 

ஒருவன் ஆயிரம் யோசனை  ஓங்கிய-  வானர   வீரன்
ஒருவன் ஆயிரம் யோசனை தூரம்  உயர்ந்துள்ளதாகிய; அருவி
மால்வரை விட்டு எறிந்து ஆர்த்தலால்
- அருவிகளையுடைய
பெரிய  கரியமலையை கடலில்  எறிந்து விட்டு, ஆரவாரித்ததால்;
மருவுவான்  கொடி   மாட   இலங்கையில்-   வானளாவிய
கொடிகளை உடைய மாடங்களைக் கொண்ட இலங்கை மாநகரின்;
தெருவெலாம்  தெண்ணீர்   புக்கு  உலாய-   தெருக்களில்
எல்லாம் தெளிந்த கடல்நீர் புகுந்து உலாவியது.
 

மால் - கரிய (பெரிய  எனலுமாம்)   இராவணன் ஆணைக்கு
அஞ்சிக்   கரை   கடவாதிருந்த  கடல்    நகருக்குள்   புகுந்து
அச்சமின்றித்  தெருக்களில்  உலாவியது என்பது தோன்ற 'உலாய'
என்றது ஓர் நயம்.
 

(39)