பக்கம் எண் :

426யுத்த காண்டம் 

தரவலோம்  மலர் என்று - (வண்டுகளுக்கு) வேண்டிய 
மலர்களை   உங்களுக்கு  தரவல்லோம்  என்று   கூறி; உயிர்
தாங்கிய மரம் எல்லாம்
- அவற்றின்  உயிர்களைக்  காத்து
ஆதரித்துக் கொண்டிருந்த மரங்களெல்லாம்; கடல் வீழ்தலும்
- வானரங்களால்  பறிக்கப்பட்டுக் கடலில் வீழ்ந்ததும்; வண்டு
எலாம்
- (அம்மரங்களின்  மலர்களில்  நிறைந்திருந்த தேனை
உண்டு வாழ்ந்திருந்த) வண்டுகள்  எல்லாம்; கரவிலாளர் விழ
- செல்வத்தை  ஒளித்து  வைக்காது தம்மை நாடி  வந்தவர்க்கு
உதவிய கொடையாளிகள் இறந்துவிழ; களைகண் இலா- பற்றுக்
கோடு எதுவுமற்ற; இரவலாளரின்- இரவலர்களைப் போல;
எங்கும் இரிந்த- எங்கும் ஓடலாயின;
 

'வலோம்' வல்லோம் என்பதன் இடைக்குறை - கரவிலாளர்
செல்வத்தை  ஒளிக்காது பிறர்க்கு உதவுபவர். வண்டுகள் பருக
வேண்டிய தேனை வேண்டுமளவு தந்த மரங்களை 'உயிர்தாங்கிய
மரம்'   என்றார்.  வரையாது  வழங்கும்  வள்ளலைப்  போல
அம்மரங்கள்  'தரவலோம்   மலர்'   என்று   கூறித்  தந்தன.
கரத்தல் - மறைத்தல்.  செல்வத்தை  மறைத்துவைக்காது  நாடி
வந்தவர்களுக்கு உதவுபவர் 'கரவிலாளர்' ஆவர் இத்தகையோர்
'கரப்பிலர்'    எனவும்,    கரத்தல்   கனவிலும்  தேற்றாதார்'
எனவும்  வள்ளுவரால்  போற்றியுரைக்கப்படுவர். களைகண் -
பற்றுக் கோடு.
 

(57)
 

6731.

தொக்கு அடங்கல ஓடும் துவலைகள்
மிக்கு அடங்கலும் போவன-மீன் குலம்,
அக் கருங் கடல் தூர, அயற் கடல்
புக்கு அடங்கிடப் போவன போன்றவே.
 

தொக்கு அடங்கல ஓடும் துவலைகள்- பலவாகச் சேர்ந்து
அடங்காதனவாக  ஓடும்நீர்த்துவலைகளோடு; மிக்கு அடங்கலும்
போவனமீன்குலம்
- முழுவதும் போவனவாகிய மீன் கூட்டங்கள்;
அக்கருங்கடல்  தூர - அவை   வாழ்ந்துவந்த  அந்தக்  கடல்
தூர்ந்து போக; அயற்கடல்புக்கு- தாம்  வாழ்வதற்குரிய வேறு
ஒரு  கடலில்  புகுந்து;   அடங்கிடப்   போவன  போன்ற-
அடங்குவதற்காகப் போவன போலக் காணப்பட்டன.
 

தொக்கு   -  பலவாகச்   சேர்ந்து.  திவலைகள்   பலவாகச்
சேர்ந்து அடங்காதனவாக விரைந்து ஓடுவதை 'தொக்கு அடங்கல
ஓடும் துவலைகள்' என்றார். மிகுதியாக  உள்ள மீன் அத்தனையும்