பக்கம் எண் :

 ஒற்றுக் கேள்விப் படலம் 467

மாலையைக் கையுறையாக் கொண்டு; வணங்கினவாறு எலாம்-
(இராமனைத்) தொழுது நின்ற செய்தி எல்லாம்; சூலம் என்ன-
சூலாயுதம் பாய்வது போன்று;என் நெஞ்சம் துளைக்கும்- என்
உள்ளத்தைக் குடையும்.
 

மாலியவான்   இராவணன்   தாயாகிய  கேகயியைப் பெற்ற
சுமாலியின்   உடன்பிறந்தோன் ஆவான்.  அமயம்  வாய்க்கும்
போதெல்லாம்  இராவண  இராசதானியில்  அறம்   உரைக்கும்
நல்லோர்கள் மிகச் சிலருள் ஒருவன்.
 

(43)
 

6789.

' "கிழி படக் கடல் கீண்டதும், மாண்டது,

மொழி படைத்த வலி" என, மூண்டது ஓர்

பழி படைத்த பெரும் பயத்து, அன்னவன்

வழி கொடுத்தது என் உள்ளம் வருத்துமால்.
 

கடல்  கிழிபடக் கீண்டதும் - கடலானது இருபிளவாகக்
கிழிந்தவுடன்;  மொழிபடைத்த  வலி   மாண்டது   என -
பாராட்டுதற்குரிய   கடலின்   வலிமை  (இன்றோடு)  அழிந்தது
எனுமாறு; ஓர்  பழி படைத்த பெரும் பயத்து அன்னவன்-
ஒப்பற்ற   பழியினைப்   பெற்றுக்   கொண்ட  பேரச்சத்தோடு
வருணன்; வழி கொடுத்தது- (இராமனின் வேண்டலுக்கிணங்கி)
அவனுக்கு  (அணைகட்ட)  வழிவகுத்துக்  கொடுத்தது  (எனும்
செய்தி);  என்   உள்ளம்  வருத்தும்  -  என்  மனத்தினை
வருத்துகின்றது.
 

உலகை அழிக்கும் திறம் வாய்ந்தது கடல்  என்றான் சென்ற
பாடலில்,   அக்கடலைக்  கிழிக்கும்  திறம்  வாய்ந்தவன்  உன்
பகைவன் என  அறிவுறுத்துகின்றான்.  மாலியவான் இப்பாடலில்.
மொழி   படைத்த   வலி   சான்றோர்  மொழி போல் வலிமை
படைத்த ஆற்றல்  எனினுமாம்.  இராமனை  வெளிப்படையாகப்
புகழின்,  இராவணன்   வெகுளக்    கூடுமாதலால்,   வருணன்
அச்சத்தை   வைத்து, இராமன்  பெருமையை உணர்த்தும் திறம்
காண்க.
 

(44)
 

6790.

'படைத்த மால் வரை யாவும் பறித்து, வேர்

துடைத்த வானர வீரர், தம் தோள்களைப்

புடைத்தவாறும், புணரியைப் போக்கு அற

அடைத்தவாறும், என் உள்ளத்து அடைத்தவால்.
 

படைத்த மால்வரை- (இறைவன்) படைத்த பெரிய மலைகள்;
யாவும் வேர் பறித்து- யாவற்றையும் வேருடன் அகழ்ந்தெடுத்து;