தொல் நகர் சுட்டவா கண்டும்- நமது தொன்மை வாய்ந்த பழம் பதியான இலங்கையை (அனுமன்) எரித்தவாறு கண்ணாற் கண்டிருந்தும்; வேலையைத் தட்டவா கண்டும் - கடலை (அணையிட்டுத்) தடுத்துள்ளவாறும் கண்டபிறகும்; தா அற்ற தெவ்வரைக் கட்டவா கண்டும்- அழிவற்ற (ஆற்றல் பெற்ற) கரன் முதலிய பகைவர்களை அழித்தவாறு கண்டபின்னும்; கண் எதிரே வந்து விட்டவா கண்டும்- (இத்தனையும் செய்தவர்கள் இப்போது, நம்) கண்ணுக்கெதிரேயே வந்து விட்டதனையும் (கண்ணாரக்) கண்டும்; மேல் எண்ண வேண்டுமோ? - (இவ்வளவும்) கண்டு விட்டபின்) மேலே (இங்குகூடிச்) சிந்தனை செய்வதும் தேவைதானோ? (தேவை இல்லை என்றபடி) |
தா அற்ற தெவ்வர் - அழிவற்ற ஆற்றல் மிக்க பகைவர்கள். அவர் விராதன், கவந்தன், கரதூடணர், மாரீசன், திரிசிரன் முதலானோர். தா - அழிவு. தெவ்வர் - பகைவர். தட்டல் - தடுத்தல். கட்டல் - களையெடுத்தல். அழித்தல். இனி, தொன்னகர் சூழ்ந்த கடலைச்சுட்டவாறு கண்டும், தடுத்தவாறு கண்டும் எனவும் உரைக்கலாம். அப்போது, "தொல்நகர் வேலை" என்பது, மத்திமதீபமாக நிற்கும். |
(47) |
இராவணன் மாலியவானைச் சினத்தல் |
6793. | என்று தாயைப் பயந்தோன் இயம்பலும், |
| தின்று வாயை, விழிவழித் தீ உக, |
| 'நன்று, நன்று! நம் மந்திரம் நன்று!' எனா, |
| 'என்றும் வாழ்தி, இளவலொடு; ஏகு' என்றான். |
| |
என்று தாயைப் பயந்தோன் இயம்பலும் - இவ்வாறு இராவணனின் தாயைப் பெற்ற (மாதாமகனே ஆகிய) மாலியவான் இராவணனிடம் உரைத்த போது; வாயைத் தின்று- (இராவணன்) சினத்தால் உதட்டைக் கடித்து; விழிவழித்தீஉக - கண்களின் வழியாகத் தீப்பொறி சிந்த; 'நன்று, நன்று - 'நல்லது, நல்லது; நம்மந்திரம் நன்று- நம் மந்திர ஆலோசனை நன்றாக நடக்கிறது?'; எனா - என்று வெகுண்டு; இளவலோடு என்றும் வாழ்தி - '(நீயும் என்) தம்பியான வீடணனோடு சேர்ந்து இனிதாக வாழ்வாயாக இப்போதே செல்' என்றான். |
தாயைப் பயந்தோன் - பாட்டன். மாலியவான். முன்பு வெளியேற்றப் பட்ட தம்பி வீடணன் நினைவுக்கு வரவே, "இளவலோடு |