மதிகெடுந்தகையோர் - புத்தி கெட்டதன்மையினர்; ஆர் அமர்மேல் - பெரும் போர் புரிவதன் பொருட்டு; நாம் உறை பதி வந்து புகுந்தனர் - நாம் வாழும் இலங்கை மாநகர் நோக்கி வந்து புகுந்துள்ளனர்; தம்மைக் கெடுப்பது ஓர் விதி கொடு உந்த - அது, தம்மைக் கெடுப்பதற்குத் தங்கள் ஒப்பற்ற கெடுவிதி பின் நின்று (பிடர்) பிடித்துத்தள்ள; விளைந்தது தான் என்றான் - நிகழ்ந்த செயலே யாகும் வேறென்ன?' |
(52) |
வந்த ஒற்றர் வாயிலாக, இராவணன் செய்தியறிதல் |
6798. | முற்றும் மூடிய கஞ்சுகன், மூட்டிய |
| வெற்று அனல் பொறிக் கண்ணினன், வேத்திரம் |
| பற்றும் அங்கையினன், படிகாரன், 'இன்று |
| ஒற்றர் வந்தனர்' என்ன, உணர்த்தினான். |
| |
முற்றும் மூடிய கஞ்சுகன்- (இப்போது) (உடல்) முழுவதும் மூடிய சட்டையையுடையவனாய்; வெற்று அனல் மூட்டிய பொறிக் கண்ணினன் - வெறும் (சினத்) தீ மட்டுமே மூட்டப்பட்டதினால் எழும் பொறி பறக்கும் கண்ணினையுடையவனாய்; வேத்திரம் பற்றும் அங்கையினன் - பிரம்பினைப் பற்றிய கைகளை யுடையவனாய்; படிகாரன் - வாயிற் காவலன் ஒருவன் (உட்புகுந்து); 'இன்று ஒற்றர் வந்தனர்'- 'இப்பொழுது உளவு அறிபவர் வந்துள்ளனர்';என்று உணர்த்தினான்- என்று இராவணனுக்கு அறிவித்தான். |
கஞ்சுகன் - சட்டையணிந்தவன். முன்பு சமுதாயத்தில் மேன்மக்கள் சட்டையணியாமலும், கீழ்மக்கள் சட்டையணிந்தும் இருந்தனர் என்பது இதனாலும் தெளிவாம். (3082) முன்பும் உணர்த்தினார். வேத்திரம் - பிரம்பு. படி - வாயில் படி. அரச மனையின் வாயிற் படியில் காவல் புரிபவன் ஆதலின் "படிகாரன்" என்றார். "படிகாரர்! எம் வரவு சொல்லுதிர் மன்னவற்கே!" (2102) என்று முன்பும் வந்தது. இன்று - இப்பொழுது எனும் பொருளில் வந்தது. |
(53) |
6799. | வாயில் காவலன் கூற, வயங்கு எரி |
| மேய வெங் கண் விறல் கொள் இராக்கதர்- |
| நாயகன், 'புகுத்து, இங்கு' என, 'நன்று' எனப் |
| போய், அவன் புகுத்த, புகுந்தார்அரோ. |