பக்கம் எண் :

 ஒற்றுக் கேள்விப் படலம் 477

6807.

'சேது பந்தனம் செய்தனன் என்றது இப்
போது வந்த புது வலியோ-ஒரு
தூது வந்தவன் தோள் வலி சொல்லிய
ஏது அந்தம் இலாத இருக்கவே?
 

ஒரு   தூது   வந்தவன்- தூதாக  வந்த  ஒருவன் ஆகிய
(அனுமனுடைய); தோள்வலி சொல்லிய ஏது- தோள் ஆற்றலைச்
சொல்ல   வல்ல    காரணங்கள்;   அந்தம்  இலாத இருக்க -
எண்ணற்றவை  (நாம் தெரிந்து)    இருக்க;    சேது   பந்தனம்
செய்தனன்   என்றது
  -   இராமன்  குரங்குகளைக்  கொண்டு,
சேதுவுக்கு  அணை  கட்டிவிட்டான்  என்பது; இப்போது வந்த
புது   வலியோ? 
-   இப்போது   தான்   புதிதாகச்   சேர்ந்த
வலிமையாமோ? (முன்பிருந்த வலிமையே என்றவாறு).
 

முன்னே  தூதனாக வந்த அனுமன் பலஏதுக்களால் விளக்கித்
தெரிவித்த  இராமன்  தோளாற்றல்  இருக்கவும்,  கடலை அணை
கட்டித் தடுத்தான்  என்றது கொண்டு, அது அவனுக்கு இப்போது
புதிதாக  உண்டான வலிமை  என்று  எண்ணுதல் தகுமோ?" என
உரைப்பினுமாம். பந்தனம் -கட்டு.  இப்பொருட்கு  தூது வந்தவன்.
அந்தம் இலாத ஏதுக்களால் சொல்லிய தோள் வலி என இயைக்க.
ஏது-காரணம். 
 

(62)
 

6808.

'மருந்து தேவர் அருந்திய மாலைவாய்,
இருந்த தானவர்தம்மை இரவி முன்
பெருந் திண் மாயற்கு உணர்த்திய பெற்றியின்,
தெரிந்து காட்டினன், நும்பி சினத்தினான்.
 

தேவர்  மருந்து  அருந்திய  மாலை  வாய்  - தேவர்கள்
அமிழ்தம்  உண்ட   ஒரு   மாலைப்பொழுதில்;  இருந்த தானவர்
தம்மை
-அவர்களிடையே மறைந்திருந்த அசுரர்களை; இரவி முன்
பெருந்திண்  மாயற்கு
- முன்பு,  சூரியன் பெருவலிமை வாய்ந்த
திருமாலுக்கு; உணர்த்திய  பெற்றியின் - (இவர் அசுரர் எனக்)
காட்டிக் கொடுத்த  தன்மை போல்; நும்பி  சினத்தினான் - உன்
தம்பியாகிய    வீடணன்   கோபங்  கொண்டவனாய்;   தெரிந்து
காட்டினான்
- குரங்கு வடிவத்திலிருந்த  எங்களை  வானரர்கட்கு
(இவர்கள் அரக்கர் எனக்) காட்டிக்கொடுத்தான்.
 

மருந்து-அமுதம். "சாவா மருந்தெனினும் வேண்டற்பாற்றன்று" -
(குறள். 82) 

(63)