துகைத்தவன் உடற்பொறை - (தன்னை நிலத்தில்) தேய்த்தவனான இராவணனின் உடலை; சுறுக்கொள இறுக்கி - புகை நாற்றம் எழுமாறு இறுக்கிப் பிடித்து; தகைப் பெரு வலத்தொடு - தகுதி நிறைந்த வலிமையோடு; தலத்திடை அமுக்கி- பூமியில் அழுத்தி; வகைப் பிறை நிறத்து - பல்வகையான வடிவங்களைக் கொண்ட பிறைகளைப் போன்ற தன்மையுடைய; எயிறுடைப் பொறி வழக்கின் - (இராவணனுடைய) பற்களைக் கொண்ட உறுப்பாகிய வாயின் வழியே; குகைப் பொழி புதுக்குருதி - குகையிலிருந்து பொங்குகின்ற வெள்ளம் போலப் (பொங்குகின்ற) புதிய இரத்தத்தை; கைக்கொடு குடித்தான் - (சுக்கிரீவன் தன்) கைகளால் அள்ளிக் குடித்தான். |
சுறுக்கொளல்- புகை நாற்றம் வீசுதல். "மங்கையர் நறுங் கூந்தலின் சுறு நாறுகின்றது" (கம்ப. 6083) பிறை நிலாப் பல்வேறு வடிவங்களில் தோன்றுவது போல், இராவணனின் பற்களும் பல்வேறு வடிவங்களில் தோன்றுவதால் "வகைப்பிறை நிறத்து எயிறு" என்றார். வழக்கின் - வழியின், பொருட்சிறப்பால் "வழக்கி" எனும் பாடம் தவிர்த்து. "வழக்கின்" எனும் பாடம் கொள்ளப்பட்டது; இராவணன் பெரிய வாய், குகைக்கும் அதில் கொட்டும் இரத்தம் குகையிலிருந்து கொட்டும் வெள்ளத்திற்கும் உவமை. |
(12) |
| 6907. | கைக்கொடு குடித்தவன் உடல் கனக வெற்பை, |
| பைக் கொடு விடத்து அரவு எனப் பல கை பற்றி, |
| மைக் கொடு நிறத்தவன் மறத்தொடு, புறத்தில் |
| திக்கொடு, பொருப்பு உற நெருப்பொடு திரித்தான். |
| |
மைகொடு நிறத்தவன் - மை போற் கறுத்த நிறமுடைய இராவணன்; கைகொடு குடித்தவன்- கைகளினாலே (தன் உதிரத்தைக்) குடித்தவனான சுக்கிரீவனுடைய; உடல் கனக வெற்பை- உடல் என்னும் மேருகிரியை; பைகொடு விடத்து அரவு எனப்- பையில் கொடிய நஞ்சினையுடைய பாம்பு பற்றியதுபோல; பலகை பற்றி - தன் பற்பலவான கரங்களால் பிடித்து; மறத்தொடு - வீரத்துடன்; புறத்தில் திக்கொடு பொருப்பு உற- புறத்தே உள்ள எட்டுத் திசையிலுமுள்ள மலைகளின் மீது மோதுமாறு; நெருப்பொடு திரித்தான் - தீப்பொறி சிதறச் சுழற்றினான். |
விசை மிகுதியுடன் ஒரு பொருள் ஒரு பொருளோடு மோதுகையில் தீ எழும் எனும் அறிவியல் உண்மை. "பொருப்புற நெருப்பொடு திரித்தான்" என்பதனால் உணர்த்தப்பட்டது. |
(13) |