விதன வெங்கண் இராக்கதர் வெள்ளம்- துயரம் புரியவல்ல கொடிய கண்களையுடைய இராக்கதர் பெருங்கூட்டத் தொகுதிகள்; பதனமும் - மதிலில் உள்ள மேடைகளிலும்;மதிலும்-மதில்களிலும்; படை நான்கிலும் - அம்புகள் விடுதற்குரிய (ஏவறை) முடுக்குகளிலும்; கதன வாயிலும்- (பகைவர்) கலங்குதற்குரிய கோபுர வாயிலிலும்; கட்டும் அட்டாலையும் - மதில் மேல் கட்டப்பட்ட மண்டபங்களிலும்; முதலயாவையும் - (இவை) முதலான எல்லா இடங்களிலும்; புக்குற்று முற்றின-புகுந்து நிரம்பின. |
பதணம் - மதில்களின் உள் உள்ள மேடை "நெடுமதில் நிறைப் பதணத்து" (பதிற்றுப். 22-25) என்பதனால் இச்சொல் பதணம் எனவும் வழங்கும் எனத் தெரிகிறது. நாஞ்சில்- மதில் உறுப்புக்களுள் ஒன்று.. அம்பு ஏவும் துளைகள் உள்ள இடம். ஞாயில் எனவும் வழங்கும். அட்டாலை-கோட்டை மதில் மேல் கட்டப்படும் மண்டபம். அரக்கர் மட்டுமே அன்றிக் கோட்டை வாயிலும் கலக்கம் செய்யும் என்பார். "கதன வாயிலும்" என்றார். "கோட்டைக்கு அரணாகப் போடப்பட்ட உட்படிகள்" என்பது பழைய உரை. |
(32) |
| 7049. | பாய்ந்த சோரிப் பரவையில் பற்பல |
| நீந்தி ஏகும், நெருக்கிடைச் செல்வன; |
| சாய்ந்து சாய்ந்து, சரம் படத் தள்ளலுற்று |
| ஓய்ந்து வீழ்ந்த; சில சில ஓடின. |
| |
நெருக்கிட- (அரக்கர்) நெருங்கி வந்தமையால்; செல்வன - (வேறிடங்கட்குத் தப்பிச்) செல்கின்ற; பற்பல- பலவாய குரங்குகள்; பாய்ந்த சோரிப் பரவையில்- பாய்ந்து ஓடிச் செல்கின்ற உதிரக் கடலில்; நீந்தி ஏகும்- நீந்திக் கடப்பதற்கு முயலும்; சிலசில - சிற்சில குரங்குகள்; சாய்ந்து சாய்ந்து - மிகவும் தளர்ந்து; சரம்பட- (அரக்கர் விட்ட) அம்புகள் தைத்ததனால்; தள்ளல் உற்று ஓய்ந்து வீழ்ந்த - உயிர் தளர்ந்து செயலிழந்து வீழ்ந்தன; சிலசில ஓடின - சிற்சில (உயிர் தப்பிப் பிழைக்க) ஓட்டம் பிடித்தன. |
உதிரவெள்ளத்தின் மிகுதி காட்ட "சோரிப்பரவை" என்றார். போரிடும் பொருட்டு மதில்களில் ஏறிய குரங்குகள், அரக்கர்களால் துரத்தப்பட்டமை கூறியவாறு. |
(33) |