அரக்கர் சேனையின் ஆரவாரம் |
| 7050. | தழிய வானர மாக் கடல் சாய்தலும், |
| பொழியும் வெம் படைப் போர்க் கடல் ஆர்த்தவால்- |
| ஒழியும் காலத்து உலகு ஒரு மூன்றும் ஒத்து |
| அழியும் மாக் கடல் ஆர்ப்பு எடுத்தென்னவே. |
| |
ஒழியும் காலத்து - யாவும் அழியும் ஊழிக் காலத்தில்; ஒரு மூன்று உலகும் ஒத்து- மூன்று உலகங்களும் ஒன்று சேர்ந்து; அழியும் - அழிவதற்குக் காரணமான; மாகடல்- பெருங்கடலானது; ஆர்ப்பு எடுத்து அன்ன- பேரொலி எழுப்பியது போன்று;தழிய மாகடல் வானரம் சாய்தலும்- (மதிலைத்) தழுவியிருந்த பெருங்கடல் போன்ற வானரப் படைகள் வலிமை குன்றிய அளவில்; பொழியும் வெம்படை- மேன்மேலும் எய்கின்ற கொடிய போர்க்கருவிகளையுடைய; போர்க்கடல் ஆர்த்த- போர் செய்யும் கடல் போன்ற இராக்கத சேனை ஆர்த்தது. |
கடல் ஆர்த்த-ஒருமைப் பன்மை மயக்கம். சுவர்க்கம், மத்திமம், பாதலம் என உலகை மூன்றாகக் கூறுதல் மரபாதலின் "உலகொடு மூன்றும்" என்றார். உலகம் கடலால் அழியும் என்பது முன்னோர் துணிபாதலின், "ஒழியும் காலத்து உலகொரு மூன்றும் ஒத்து அழியும் மாக்கடல்" என்றார். |
(34) |
| 7051. | முரசும், மா முருடும், முரல் சங்கமும், |
| உரை செய் காளமும், ஆகுளி ஓசையும், |
| விரைசும் பல் இயம், வில் அரவத்தொடும், |
| திரை செய் வேலைக்கு ஓர் ஆகுலம் செய்தவே. |
| |
முரசும் - முரசுக் கருவியும்; மாமுருடும் - பெரிய முருடு என்னும் கருவியும்; முரல் சங்கமும் - முரலுகின்ற சங்கும்; உரை செய் காளமும் - புகழ் பெற்ற எக்காளமும்; ஆகுளி ஓசையும் - ஆகுளி என்னும் சிறு பறையும்; (என)விரைசு பல் இயம்- பலவகையாய்க் கலந்து ஒலிக்கும் பல்வகைக் கருவிகளின் ஓசையும்; வில் அரவத்தொடும் - வில்லிலிருந்து சுணை விடுகையில் எழும் ஓசையுடன் கூடி;திரை செய் வேலைக்கு ஓர் ஆகுலம் செய்த - அலையால் ஆர்ப்பரிக்கும் கடலுக்கும் ஒரு மனக்கலக்கத்தை உண்டாக்கிவிட்டன. |