பக்கம் எண் :

 முதற் போர் புரி படலம் 649

7074.

வென்றி வானர வீரர் விசைத்து எறி 

குன்றும் மா மரமும், கொடுங் காலனின் 

சென்று வீழ, நிருதர்கள் சிந்தினார்; 

பொன்றி வீழ்ந்த, புரவியும் பூட்கையும். 

 

வென்றி வானர வீரர் -  வெற்றிக்குரிய வானர வீரர்கள்;
விசைத்து எறி- விசையோடு எறிகின்ற; குன்றும் மாமரமும்-
மலைகளும் பெரிய மரங்களும்; கொடும் காலனின் - கொடிய
கூற்றுவனைப் போல;  சென்று   வீழ-   (விரைந்து)  சென்று
வீழ்ந்த  போது;    நிருதர்கள்   சிந்தினார்-  அரக்கர்கள்
சிதறினர்;   புரவியும்  பூட்கையும்   பொன்றி   வீழ்ந்த-
குதிரைகளும் யானைகளும் இறந்து வீழ்ந்தன.
  

புழைக்கை - பூட்கை  என   ஆனையின்  பெயராயிற்றுப் 
போலும்.  துளையுடைய கையுடையது. என்னும் காரணப்பெயர். 
சினை ஆகுபெயர்.
  

(58)
 

7075.

தண்டு, வாள், அயில், சக்கரம், சாயகம், 

கொண்டு, சீறி, நிருதர் கொதித்து எழ, 

புண் திறந்து குருதி பொழிந்து உக, 

மண்டி ஓடினர், வானர வீரரே. 

 

நிருதர்-  சினம்  மிக்க   அரக்கர்;  தண்டுவாள் அயில்
சக்கரம்   சாயகம்  கொண்டு
-   கதை,   வாள்,   வேல்,
சக்கரப்படை,   அம்பு    முதலியன   கைக்கொண்டு;   சீறிக்
கொதித்து  எழ
-  வெகுண்டு  மனம்  வெம்பி எழுந்தபோது; 
வானர  வீரர்கள்
- குரங்கு  வீரர்கள்; புண் திறந்து குருதி
பொழிந்து உக
-(பகைவர் ஆயுதங்களால் விளைந்த) புண்களின்
வாய்  திறந்து  கொட்டிய  உதிரம்  சிந்த;  மண்டி ஓடினர் -
நெருங்கி ஓடினர்.
 

தண்டு-கதை. சாயகம்-அம்பு.
 

(59)
 

நீலன் நிகழ்த்திய போர்
  

7076.

எரியின் மைந்தன், இரு நிலம் கீழுற, 

விரிய நின்ற மராமரம் வேரொடும் 

திரிய வாங்கி, நிருதர் வெஞ் சேனை போய் 

நெரிய, ஊழி நெருப்பு என வீசினான்.