தன் எதிரே நின்று பொருது அழிந்தாலும் வீரருக்குரிய துறக்கமும், வீரன் என்ற பொன்றாப் புகழும் கிடைக்குமாதலின் "பொன்றுதி எனினும் நல்லை ஆகுதி" என்றான். வெற்றியும் தோல்வியும் வீரர்க்கு மாறி மாறி வரும் இயல்பினவாதலின், இப்பொழுது தோற்ற நான் இலங்கைக்குட் சென்று, மீண்டும் படையொடு வந்து வெல்வேன் என்பதை மட்டும் மனத்தில் நயக்காதே; நீ மாள்வது உறுதி எனப் பெருமான் தெளிவுறுத்தியவாறு. |
(254) |
7271. | 'ஆள் ஐயா! உனக்கு அமைந்தன மாருதம் அறைந்த |
| பூளை ஆயின கண்டனை; இன்று போய், போர்க்கு |
| நாளை வா' என நல்கினன்--நாகு இளங் கமுகின் |
| வாளை தாவுறு கோசல நாடுடை வள்ளல். |
| |
ஆள் ஐயா- அரக்கரை ஆள்கின்ற ஐயா; உனக்கு அமைந்தன - உனக்குத் துணையாக அமைந்திருந்த படைகள் அனைத்தும்; மாருதம் அறைந்த பூளை ஆயின கண்டனை - பெருங்காற்றினால் தாக்கப்பட்ட பூளைப் பூக்களைப் போல சிதைந்து போயினமையைக் கண்டாய்; இன்று போய் நாளை போர்க்கு வா- இன்று உன் இலங்கையரண்மனைக்குச் சென்று, (மேலும் போர்புரிய விரும்பினால்) போர்க்கு நாளைக்கு வருவாயாக; என- என்று; நல்கினன் -(இராவணனுக்கு) அருள் புரிந்து விடுத்தான்; (யார் என்னில்) நாகு இளங்கமுகின் - மிகவும் இளைய கமுக மரத்தின்மீது; வாளை தாவுறும் கோசல நாடுடை வள்ளல் - வாளை மீன்கள் தாவிப் பாயும் (நிலம், நீர்வளம் மிக்க) கோசல நாட்டுக்கு உரிய வள்ளலாகிய இராமபிரான். |
இராவணன் நால்வகைப் படைகளின் அழிவிற்குப் பூளைப் பூவை உவமையாக்கினார். "காற்றிடைப் பூளை கரந்தென அரந்தையுறக் கடல் அரக்கர் சேனை, கூற்றிடைச் செல்லக் கொடுங்கணை துரந்த கோலவில் இராமன் தன் கோவில்" (பெரிய திரு. 4:10:6) எனத் திருமங்கையாழ்வார் மொழிந்துள்ள உவமை தம் சிந்தை கவர்ந்தமையால், அவர் மொழியைப் பொன்னே போல் போற்றி, "மாருதம் அமைந்த பூளையாயின்" என்று மொழிந்தார். "பொங்குகோபம் சுடப்பூளை வீ என்ன' (கம்ப. 339); "பூளை வீந்தெனப் போயின" (கம்ப. 5973) என மேலும் கூறுவார். தன் மனையாட்டியை வஞ்சித்து இன்னும் சிறை வைத்துள்ள மாபாதகன் நிராயுதனாகக் கண்முன் நிற்பது அறிந்தும், அவனைக் கொல்லாது, "இன்று போய்ப் போர்க்கு நாளை வா" என நவின்ற அருள் மனம் சான்றோர் பலரின் உள்ளங் கவர்ந்ததாம். இதுவே தழிஞ்சி எனும் புறப்பொருள் துறையாயிற்று. "அழியுநர் புறக்கொடை அயில்வாள் |