பக்கம் எண் :

 கும்பகருணன் வதைப் படலம் 779

நெடுவயிரத்  தோளான் - வயிரம் போல் உறுதி உள்ள
நீண்ட திரள் தோள் இராவணன்; வான் நகும் - தான் வென்று
நகைத்த   வானவர்  சிரிப்பர்;  மண்ணும்  எல்லாம் நகும் -
மண்ணுலக மாந்தரும்  பிறரும்  சிரிப்பர்;  நான்நகு  பகைஞர்
எல்லாம்   நகுவர்  என்று
- தான்  வென்று  சிரித்தற்குரிய
பகைவர்களாகிய   சிறுதொழில்  மனிதர்கள்  சிரிப்பர்  என்று;
அதற்கு  நாணான்- எண்ணி  அதற்கு  நாணப்படாதவனாய்;
வேல்   நகு  நெடுங்கண்-  வேலை  வென்றிட்ட  நீண்ட
கண்களையும்; செவ்வாய்- சிவந்த வாயினையும்; மெல் இயல்
- மெத்தென்ற சாயலினையும் உடைய; மிதிலை வந்த சானகி
நகுவள்
- மிதிலையில்  தோன்றிய  சனகன் மகளாகிய சானகி
எள்ளிச்  சிரிப்பாள்; என்றே நாணத்தால் சாம்புகின்றான் -
என்று எண்ணி எண்ணியே நாணத்தால் வாடினான்.
 

வான், மண் - இடவாகுபெயர்கள். இராவணனின் நினைவில்
சீதையின் கண்ணும்  வாயும் சாயலும் தோன்றுவதாகக் கவிஞர்
குறிப்பிட்டுள்ளது    ஆழ்பொருள்    கொண்டதாகும்.   தன்
தோல்வியைக் கண்ணால் பார்த்து வாயால் சிரித்து மெத்தென்ற
உடல்  சாயல்  குலுங்கச்  சீதை நகைப்பாளே என்ற எண்ணம்
இராவணனது  மனதில்  தோன்றியதை  இக்குறிப்பு  உணர்த்தி
நிற்கிறது.
 

(11)
 

மாலியவான் இராவணனிடம் வினவல்
 

7283.

ஆங்கு, அவன்தன் மூதாதை ஆகிய, மூப்பின்

யாக்கை

வாங்கிய வரி வில் அன்ன, மாலியவான் என்று ஓதும்

பூங் கழல் அரக்கன் வந்து, பொலங் கழல் இலங்கை

வேந்தைத்

தாங்கிய அமளிமாட்டு, ஓர் தவிசுடைப் பீடம்

சார்ந்தான்.

 

ஆங்கு- அப்போது;  வாங்கிய  வரிவில் அன்ன - வளைந்த
கட்டமைந்த    வில்லைப்   போன்ற;   மூப்பின்   யாக்கை -
முதுமையால்  வளைந்த  உடம்பினையுடைய; மாலியவான் என்று
ஓதும்
- மாலியவான் என்று சிறப்பித்துச் சொல்லப்படுகிற; அவன்
தன் மூதாதை ஆகிய- இராவணனுக்குப் பாட்டன் முறை உடைய;
பூங்கழல் அரக்கன் வந்து - அழகிய வீரக்கழலணிந்த அரக்கன்
வந்து; பொலங்கழல் இலங்கை வேந்தை - பொன்னால் ஆகிய