"மறந்தன பெரிய; போன வரும்" மருந்து தன்னால், இறந்து இறந்து உய்கின்றேன் யான்; யார் இது தெரியும் ஈட்டார்?
அறந்தரும் செல்வம் அன்னீர் - அறவழியில் கிடைத்த செல்வத்தை ஒத்துள்ளவரே! அமிழ்தினும் இனியீர் - அமிழ்தத்தைக் காட்டிலும் இனிமை வாய்ந்தவரே! என்னைப் பிறந்திலன் ஆக்க வந்தீர் - என்னைப் பிறக்காதவன் போல் செய்ய வந்தவரே! பேர் எழில் மானம் கொல்ல - நுமது பேரழகு என் மானத்தை அழிக்க; பெரிய மறந்தன போன - நான் செய்த பெருஞ்செயல்கள் மறந்து விட்டன; வரும் எனும் மருந்து தன்னால் - நீர் இரங்கும் நாள் வரும் என்னும் மருந்தினால்; யான் இறந்து இறந்து உய்கின்றேன் - யான் செத்துச் செத்துப் பிழைக்கின்றேன்; யார் இது தெரியும் ஈட்டார் - எனது இந்தத் தன்மையை அறியும் தன்மையுடையவர் யார்?
நீர் மனம் இரங்கி எனக்கு அருள் தர வேண்டும் என்கிறான் இராவணன். பெரிய - பெருஞ்செயல்கள். போன - மறந்து விட்டன. பேர் எழில் மானம் கொல்ல பெரிய மறந்தன போன என இயைக்க. இறந்து இறந்து - அடுக்குத்தொடர்.
(15)
7647.
‘அந்தரம் உணரின், மேல்நாள், அகலிகை என்பாள், காதல் இந்திரன் உணர்த்த, நல்கி எய்தினாள் இழுக்குற்றாளோ? மந்திரம் இல்லை, வேறு ஓர் மருந்து இல்லை, மையல் நோய்க்குச் சுந்தரக் குமுதச் செவ்வாய் அமுது அலால்;-அமுதச் சொல்லீர்!
அமுதச் சொல்லீர் - அமுதம் போன்ற இனிய சொல்லை உடையவரே! அந்தரம் உணரின் - நடு நிலைமையோடு எண்ணிப் பார்த்தால்; மேல்நாள் - முன் ஒரு காலத்தில்; அகலிகை என்பாள் - அகலிகை என்ற பெயர் உடையவள்; காதல் இந்திரன் உணர்த்த - தனது காதலை இந்திரன் உணர்த்த; நல்கி எய்தினாள் - அவனுக்குத் தன்னைக் கொடுத்து இன்பம் அடைந்தாள்; இழுக்குற்றாளோ - அதனால் அவள் தாழ்நிலையை அடைந்தாளோ? (இல்லையல்லவா?) மையல் நோய்க்கு -