இருந்தது என்க. திரைத்து - சுருட்டி, படி - நிலம். நெடிதின் - நீண்ட நேரம். |
(17) |
சீதை இராவணனுக்குத் தன் கருத்தை உரைத்தல் |
7649. | வல்லியம் மருங்கு கண்ட மான் என மறுக்கமுற்று, மெல்லியல் ஆக்கை முற்றும் நடுங்கினள், விம்முகின்றாள், ‘கொல்லிய வரினும், உள்ளம் கூறுவென், தெரிய’ என்னா, புல்லிய கிடந்தது ஒன்றை நோக்கினள், புகல்வதானாள்: |
மெல்லியல் - மெத்தென்ற சாயலை உடைய சீதை; (இராவணனைத் தன் அருகே பார்த்து) வல்லியம் மருங்கு கண்ட மான் என மறுக்கமுற்று - புலியைத் தன் பக்கத்தில் கண்ட மான் போலக்கலக்கம் அடைந்து; ஆக்கை முற்றும் நடுங்கினள் விம்முகின்றாள் - உடம்பு முழுவதும் நடுங்கி விம்மிப் புலம்பி; கொல்லியவரினும் - என்னை அவன் கொல்லும் படிக்கு வந்தாலும்; உள்ளம் தெரியக் கூறுவென் என்னா - என் மனதில் உள்ள கருத்தை நன்றாக அறியும்படி கூறுவேன் என்று எண்ணி; கிடந்தது புல்லிய ஒன்றை - அருகில் தரையில் கிடந்த புன்மையான (துரும்பு) ஒன்றை; நோக்கினள் புகல்வதானாள் - நோக்கிக் கூறலானாள். |
இராவணனுடன் பேசுவது தன் கற்புத் திண்மைக்கு இழுக்கு எனக் கருதிச் சீதை துரும்பைப் பார்த்துப் பேசுகிறாள். ‘ஒரு துரும்பை விடத் தாழ்ந்து விட்டாய்’ என்பதால் அவ்வாறு துரும்பைப் பார்த்துப் பேசினாள் எனலுமாம். நடுங்கினள், நோக்கினள் - முற்றெச்சங்கள். கொல்லிய - செய்யிய என்னும் வாய்பாட்டு வினை எச்சம். |
(18) |
7650, | ‘ ”பழி இது; பாவம்” என்று பார்க்கிலை; “பகரத் தக்க மொழி இவை அல்ல” என்பது உணர்கிலை; முறைமை நோக்காய்; கிழிகிலை நெஞ்சம்; வஞ்சக் கிளையொடும் இன்றுகாறும் அழிகிலை என்றபோது, என் கற்பு என் ஆம்? அறம்தான் என் ஆம்? |