ஒன்றப்புகும் காலம் உணர்தல் - மாமரம் துண்டு பட்டமையால் இவனை எக்காலத்துத் தாக்குவது என்று நினைத்தல், நின்று நினையாதமுன் கருவி இன்மையால் எப்போர்க்கருவி கொண்டு தாக்குவது என நினைத்தல். இங்குக் காலமும் கருவியும் கூறியவாறு காண்க. நீலன் தண்டு கொடுத்தல் - இருவர் போரிடும் போது அடுத்தவர் இடைநுழைந்து போரிடுதல் இல்லை. ஆனால் அவர்களுக்குப் போர்க் கருவி கொடுத்து உதவுதல் உண்டு என்பது இதனால் தெரிகிறது. |
(239) |
7966. | அத் தண்டு கொடுத்தது கைக்கொடு அடைந்தான், ஒத்து அண்டமும் மண்ணும் நடுங்க உருத்தான், பித்தன் தட மார்பொடு தோள்கள் பிளந்தான்; சித்தங்கள் நடுங்கி, அரக்கர் திகைத்தார். |
கொடுத்தது அத்தண்டு - (நீலன் கொணர்ந்து) கொடுத்தாகிய அந்தத் தண்டினை; கைக்கொடு அடைந்தான் - கையில் கொண்டு போரிட அடைந்தவனாகிய (சுக்ரீவன்); அண்டமும் மண்ணும் ஒத்து நடுங்க உருத்தான் - விண்ணும் மண்ணும் ஒன்று போல் நடுங்குமாறு சினந்தவனாகி; பித்தன் - (போர்) வெறிகொண்டவனாகிய (கும்பனுடைய); தடமார்பொடு தோள்கள் பிளந்தான் - பரந்த மார்பையும் தோள்களையும் பிளந்திட்டான்; அரக்கர் - (அதுகண்ட) அரக்கர்கள்; சித்தங்கள் நடுங்கி திகைத்தார் - மனங்கள் நடுங்கித் திகைத்தனர். |
அந்தாதித்தொடை காண்க. |
(240) |
7967. | அடியுண்ட அரக்கன், அருங் கனல் மின்னா இடியுண்டது ஓர் மால் வரை என்ன, விழுந்தான்; ‘முடியும் இவன்’ என்பது ஓர் முன்னம், வெகுண்டான், ‘ஒடியும் உன தோள்’ என, மோதி உடன்றான். |
அடியுண்ட அரக்கன் - அடிபட்ட அரக்கனாகிய கும்பன்; அருங்கனல் மின்னா - பெருநெருப்போடு மின்னி; இடியுண்டது ஓர் மால் வரை என்ன விழுந்தான் - இடியால் தாக்கப்பட்ட ஒரு பெரியமலை என்று கூறுமாறு (நிலத்தில்) விழுந்து; இவன் முடியும் என்பது ஓர் முன்னம் - இவன் இறந்து முடிவான் என்று கருதுதற்கு முன்பே; வெகுண்டான் - சினம் கொண்டவனாய்; உனதோள் ஒடியும் என - (சுக்ரீவனைப் பார்த்து) உன்தோள் (இப்போது) ஒடியும் என்று கூறி; மோதி உடன்றான் - மோதிப் போரிட்டான். |
(241) |