பக்கம் எண் :

2 யுத்த காண்டம்

வெவ் வழி மாயை ஒன்று, வேறு இருந்து எண்ணி வேட்கை
இவ்வழி இலங்கை வேந்தன் இயற்றியது இயம்பலுற்றாம்.

அவ்வழி - அந்தப் போர்க்களமாகிய இடத்தில்; கருணன் செய்த -
கும்பகருணன் செய்த; பேர் எழில் ஆண்மை எல்லாம் - நேர்மை
தவறாத அழகிய ஆண்மைச் செயல்களையெல்லாம்; செவ்வழி உணர்வு
தோன்றச் செப்பினம்
- செம்மையாக உணர்வில் தோன்றுமாறு
கூறினோம்; இவ்வழி - இந்த இலங்கையில்; இலங்கை வேந்தன் -
இலங்கை வேந்தனாகிய இராவணன்; வேட்கை - பெருங்காமத்தால்;
வெவ்வழி மாயை ஒன்று - அறமல்லாத வழியாகிய சிறுமை நீங்காத
மாயைச் செயல் ஒன்றினை; வேறு இருந்து எண்ணி - வேறாகத் தனி
இடத்தில் இருந்து நினைந்து; இயற்றியது இயம்பலுற்றாம் -
செய்ததைக் கூறத் தொடங்கினோம்.

கருணன் போரறம் தவறாது வீரப் போர் புரிய, இராவணன்
அறமல்லாத மாயைச் செயலில் ஈடுபட்டான் என்றவாறு. சிறுமை -
அறமற்ற சிறுநெறி; மாயை - வஞ்சனைச் செயல்.

(1)

7633.

மாதிரம் கடந்த தோளான், மந்திர இருக்கை வந்த
மோதரன் என்னும் நாமத்து ஒருவனை முறையின் நோக்கி,
‘சீதையை எய்தி, உள்ளம் சிறுமையின் தீரும் செய்கை
யாது? எனக்கு உணர்த்தி, இன்று, என் இன் உயிர் ஈதி’
                                                                                                                 என்றான்.

மாதிரம் கடந்த தோளான் - திசைகளை எல்லாம் வென்ற
தோள்வலி உடைய இராவணன்; மந்திர இருக்கை வந்த - தன் மந்திர
மண்டபத்துக்கு வந்த; மோதரன் என்னும் நாமத்து ஒருவனை -
மகோதரன் என்னும் பெயருடைய மாயையில் வல்ல ஒருவனை;
முறையின் நோக்கி - முறையாகப் பார்த்து; சீதையை எய்தி - நான்
சீதையை அடைந்து; உள்ளம் சிறுமையின் தீரும் செய்கையாது -
மனத் துன்பத்தில் இருந்து விடுபட வழியாது?; எனக்கு உணர்த்தி -
அதை எனக்குக் கூறி; இன்று - இப்போது; என் இன் உயிர் ஈதி
என்றான்
- எனது இனிய உயிரைத் தருவாய் என்றான்.