சூலப்படையான். சூலப்படையை உடையவனாகிய நிகும்பன், ஆலம் - ஆலகால நஞ்சு, தாலப்படை - பனைமரம் ஆகிய படை, நீலக்கிரி - நீலமலை ஈண்டு நிகும்பன், பொற்கிரி - பொன் மலை ஈண்டு அங்கதன். |
(248) |
நிகும்பன் சூலத்தைத் தடுத்து அனுமன் அவனை அழித்தல் |
7975. | எறிவான் உயர் சூலம் எடுத்தலும், ‘இன்னே முறிவான் இகல் அங்கதன்’ என்பதன் முன்னே, அறிவான் அடல் மாருதி அற்றம் உணர்ந்தான், பொறி வான் உகு தீ என வந்து புகுந்தான். |
எறிவான் - (நிகும்பன்) எறிவதற்காக; உயர் சூலம் எடுத்தலும் - சிறந்த சூலத்தை (உயர்த்தி) எடுத்த உடனே; இகல் அங்கதன் - போர்த் தொழில்வல்ல அங்கதன்; இன்னேமுறிவான் என்பதன் முன்னே - இப்பொழுதே அழிந்து படுவான் என்பதற்கு முன்பே; அடல் மாருதி - கொல்லும் தொழில்வல்ல அனுமன்; அறிவான் - (அதனை) அறிந்தவனாய்; அற்றம் உணர்ந்தான் - (அங்கதனின்) முடிவை உணர்ந்து; பொறிவான் உகு தீ என - பொறியை மிகுதியாக வெளிப்படுத்துகிற தீயினைப் போல; வந்து புகுந்தான் - (அவ்விருவரிடையே) வந்து புகுந்தான். |
(249) |
7976. | தடை ஏதும் இல் சூலம் முனிந்து, சலத்தால், விடையே நிகர் அங்கதன்மேல் விடுவானை, இடையே தடைகொண்டு, தன் ஏடு அவிழ் அம் கைப் புடையே கொடு கொன்று, அடல் மாருதி போனான். |
தடை ஏதும் இல் சூலம் - (உயிரைப் போக்குவதில்) தடை எதுவும் இல்லாத சூலத்தை; முனிந்து - சினந்து; சலத்தால் - வஞ்சனையோடு; விடையே நிகர் அங்கதன் மேல் விடுவானை - காளையை ஒத்த அங்கதன் மீது செலுத்துபவனாகிய நிகும்பனை; இடையே தடை கொண்டு - இடையே (சென்று) தடுத்துக் கொண்டு; தன் - தன்னுடைய; ஏடு அவிழ் அம் கைப் - இதழ் விரிந்தது போல் அமைந்த அழகிய கைகளால்; புடையே கொடு கொன்று - புடைத்துக் கொன்று; அடல் மாருதி போனான் - கொல்லும் தொழில் வல்ல மாருதி சென்றான். |
(250) |