பக்கம் எண் :

 அதிகாயன் வதைப் படலம் 203

                  தலைவர்களை இழந்த அரக்கர் சேனையின் நிலை
 

7977.

நின்றார்கள் தடுப்பவர் இன்மை நெளிந்தார்,
பின்றாதவர் பின்றி இரிந்து பிரிந்தார்;
வன் தாள் மரம் வீசிய வானர வீரர்
கொன்றார்; மிகு தானை அரக்கர் குறைந்தார்.
 

நின்றார்கள்     - (இதுவரை) பின்னிடாது நின்ற (அரக்க வீரர்கள்);
தடுப்பவர்  இன்மை  நெளிந்தார் - (குரங்குப்படைகளைத்) தடுத்திடும்
(தலைவர்கள்)   இல்லாமையால்  தத்தளித்து;  பின்றாதவர்  பின்றி  -
புறங்கொடாதவர்  புறங்கொடுத்து;  இரிந்து  பிரிந்தார் - நிலைகெட்டுப்
பிரிந்தார்கள்;   வன்தாள்  மரம்  வீசிய  -  வலிய  அடிப்பகுதியைக்
கொண்ட   மரங்களை   வீசிய;  வானர  வீரர்  -  குரக்கு  வீரர்கள்;
மிகுதானை    கொன்றார்   -   (அரக்கரின்)   பெரும்   படையைக்
கொன்றார்கள்;   அரக்கர்   குறைந்தார்   - அதனால்  அரக்க  வீரர்
எண்ணிக்கையில் குறைந்தார்கள்.
 

நெளிதல்  -  தத்தளித்தல்,  பின்னாதவர் - பின்னிடாதவர், இரிதல் -
நிலைகெட்டு ஓடல்.
 

                                                 (251)
 

7978.ஓடிப் புகு வாயில் நெருக்கின் உலந்தார்,
கோடிக்கு அதிகத்தினும் மேல் உளர்; குத்தால்
பீடிப்புறு புண் உடலோடு பெயர்ந்தார்,
பாடித்தலை உற்றவர், எண் இலர் பட்டார்,
 

புகுவாயில்     ஓடி - நகரத்துக்குள் ஓடி; புகுவாயில் - புகுகின்ற
வாயிலின்கண்;  நெருக்கின் உலந்தார்  -  (ஏற்பட்ட)  நெருக்கத்தால்
உயிரிழந்தவர்; கோடிக்கு அதிகத்தினும் மேல் உளர்-கோடிக்கு மேல்
அதிகமாக  உள்ளனர்;  குத்தால் - (வானர  வீரர் குத்திய) குத்தினால்;
பீடிப்புறு புண் உடலோடு பெயர்ந்தார் -உண்டாகிய புண் உடலோடு
திரும்பிப்   போய்;   பாடித்தலை   உற்றவர்   -   பாசறைக்   கண்
சேர்ந்தவர்கள்;   எண்   இலர்   பட்டார்  -  எண்ணில்லாதவர்கள்
இறந்துபட்டார்கள்.
 

                                                 (252)
 

7979.‘தண்ணீர் தருக’ என்றனர் தாவுற ஓடி,
உண் நீர் அற, ஆவி உலந்தனர், உக்கார்;
கண்ணீரொடும் ஆவி கலுழ்ந்தனர்; காலால்
மண் ஈரம் உற, கடிது ஊர் புக வந்தார்.