பக்கம் எண் :

218யுத்த காண்டம் 

நாகபாசத்தின்     வரலாற்றை விளக்கிக் கூறினான். கருடன் வந்து
இராமனைத்    துதித்து    நாகபாசத்தை   நீக்கினான்.   இலக்குவன்
முதலியோர் விழித்து எழுந்தனர். அனுமனின் யோசனைப்படி குரக்குச்
சேனை  பேரொலி  செய்தது.  ஒலி கேட்ட இராவணன் இந்திரசித்தன்
பகைவரை   வென்றதாகக்   கூறிய  கூற்றைப்  பொய்  என  எள்ளி
இந்திரசித்தனின்   அரண்மனையை  அடைந்தான்.  அங்கு  இருந்த
இந்திரசித்தனிடம்,   பகைவர்   உயிருடன்   உள்ளமை   கூறினான்.
அப்போது தூதுவர் நிகழ்ந்தவை கூற, இராவணன் கருடனை இகழ்ந்து,
இந்திர  சித்தனை  மீண்டும்  போருக்குச் செல்க எனக் கூற அவனும்
அதை ஏற்றான் என்ற செய்திகள் இப்படலத்தில் கூறப்பட்டுள்ளன.
 

                  அரக்கியர் அழுகை கேட்டு இந்திரசித்தன் எழுதல்
 

கலிநிலைத்துறை
 

8002.‘குழுமி, கொலை வாட் கண் அரக்கியர், கூந்தல் தாழ,
தழுவித் தலைப்பெய்து, தம் கைகொடு மார்பின் எற்றி,
அழும் இத் தொழில் யாதுகொல்?’ என்று, ஓர் அயிர்ப்பும்
                                        உற்றான்,
எழிலித் தனி ஏறு என இந்திரசித்து எழுந்தான்.

 

இந்திரசித்து   - இந்திரசித்தன்; கொலை வாட்கண் அரக்கியர் -
கொல்லும் தன்மை அமைந்த  வாளினைப்  போன்ற கண்களை உடைய
அரக்கியர்கள்;  குழுமி  -  ஒன்று  சேர்ந்து;  கூந்தல் தாழ - கூந்தல்
விரிந்து  தொங்க;  தழுவித்  தலைப்  பெய்து  -  (ஒருவரை ஒருவர்)
கட்டிக்கொண்டு  கூட்டமாக;  தம்கை  கொடு  -  தங்கள்  கைகளைக்
கொண்டு;  மார்பின்  எற்றி  அழும்  - மார்பில் அடித்துக் கொண்டு
அழுகிற;  இத்தொழில்  யாது கொல் என்று - இந்தச் செயல் என்ன
காரணமாகவோ  என்று;  ஓர்  அயிர்ப்பும் உற்றான் - ஓர் ஐயத்தை
(மனதில்)  அடைந்து; எழிலித் தனி ஏறு என - மேகத்தின் இடையில்
தோன்றும்   ஒப்பில்லாத  ஆணிடி  போல;  எழுந்தான்  -  எழுந்து
வந்தான்.
 

அயிர்ப்பு    - ஐயம். இந்திரசித் என்ற வடசொல்லுக்கு இந்திரனை
வென்றவன்     என்பது    பொருள்.    இவன்    இராவணனுக்கும்,
மண்டோதரிக்கும் பிறந்தவன். இவன் இயற்பெயர் மேகநாதன் என்பது.
இராவணன் திக்குவிசயம் செய்த காலத்தில் சுவர்க்கத்தில் நடந்த